பேசவில்லை... பேசவில்லை... மன்னிச்சிங்குங்க... மன்னிச்சிங்குங்க... பதறியடித்த நாஞ்சில் சம்பத்
கொடைக்கானல்: கொடைக்கானலில் நடந்த அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக துணை கொ.ப.செ. நாஞ்சில் சம்பத், அரசியல் கலந்து பேசியதால அவருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இதையடுத்து மன்னிச்சிக்குங்க என்று பதறிப் போய் கூறினார் சம்பத்.
கொடைக்கானல் லயன்ஸ் சங்கம் சார்பில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தந்தை என்ற பெயரில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
அப்போது அவர் மொரார்ஜி தேசாய்தான் சிறந்த தந்தை என்று பேசினார். மொரார்ஜி வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்லி அவர் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்.
மும்பை முதல்வராக இருந்தபோது
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், 1955 ல், மும்பை மாகாண முதல்வராக இருந்தார். அப்போது அவரது மகள், பள்ளி இறுதி வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.
பெயிலாகி விட்டேன் தந்தையே...
தந்தையைச் சந்தித்த மகள், அப்பா, நான் நன்றாக தேர்வு எழுதினேன். ஆனால், உங்கள் ஆட்சியில் உள்ள ஆசிரியர்கள் ஒழுங்காக தேர்வுத்தாளை திருத்தவில்லை; நான் பெயிலாகி விட்டேன். நீங்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம் சொல்லி, என்னை பாஸ் செய்ய வைக்க வேண்டும் என்றார்.
மறுத்தார் தந்தை.. தற்கொலை செய்த மகள்
ஆனால், மொரார்ஜி தேசாய் மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த அவரது மகள், தற்கொலை செய்து கொண்டார்.
பெருமைப்பட்ட மொரார்ஜி
இதுகுறித்து நிருபர்கள், உங்களது மகளின் தற்கொலைக்கு நீங்கள்தானே காரணம்? என, மொரார்ஜியிடம் கேட்டனர். மகள் இறந்தது எனக்கு மிகுந்த துக்கத்தை தந்துள்ளது. ஆனாலும், எனது நிர்வாகத்தில் மகளுக்காக நான், நிர்வாகத்தில் தலையிட மறுத்ததை நினைத்து பெருமைப் படுகிறேன் என்றார். அவர் தான் உண்மையில், இந்தியாவின் சிறந்த தந்தை.
ஆனால் தமிழகத்தில்...
ஆனால், தமிழகத்தில் என்ன நிலைமை? மகன்களுக்காக கட்சி நடத்தும் தந்தை ஒருவர் இருக்கிறார். அவர், மகளுக்காக எதையும் இழக்க தயாராக இருக்கிறார்.
அரசியல் பேசாதே...
சம்பத் இப்படிக் கூறியபோது கூட்டத்தில் இருந்தவர்கள், லயன்ஸ் சங்க கூட்டத்தில் அரசியல் பேசக் கூடாது, பேசாதே என்று கூறி சத்தம் போட்டனர்.
பேசவில்லை.. பேசவில்லை
உடனே சுதாரித்த சம்பத், பேசவில்லை, பேசவில்லை.. பேசியிருந்தா மன்னிச்சிங்குங்க என்று கூறி விட்டு பேச்சைத் தொடர்ந்தார்.