அறைகூவல்கள் அதிகம் வருவதால் கவலையாக இருக்கிறது.. நாஞ்சில் சம்பத்
அறை கூவல்கள் அதிகம் வருவதால் தினகரனை சந்தித்தேன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை : எந்த அறைகூவல்கள் விடுக்கப்பட்டாலும் அதனை சந்திக்கும் தைரியம் தினகரனுக்கு இருப்பதாக அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் டிடிவி. தினகரனை இன்று காலை நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசினார். அதற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மரியாதை நிமித்தமாக தினகரனை சந்திக்க வந்தேன், அறைகூவல்கள் அதிகமாக வருவதால் கவலையுடன் தினகரனை சந்தித்தேன். கவலைப்படும் நிலையில் தினகரன் இல்லை, அறைகூவல்களை சந்திக்கும் தைரியம் தினகரனுக்கு இருக்கிறது.
ஆட்சியும், அதிகாரமமும் இருப்பதால் விதை நெல்லையே விற்கத் துணிந்துவிட்டனர். பால் வளர்த்த முளையை கிள்ளி பல்லாங்குழி ஆடத் துணிந்துவிட்டார்கள். நேற்று மாலை இரண்டு அணிகள் ஒரு கேலிக்கூத்தை நடத்தினார்கள், இவர்களால் கேலிக்கூத்து தான் நடத்த முடியும் அதிமுகவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்று எப்போதும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சொன்னது கிடையாது. கட்சியும் ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எந்தத் தவறும் செய்யவில்லை.
தினகரனை விலக்கி வைப்பதாக தீர்மானம் போட்டு கட்சியில் இருந்து விலக்குகிறார்கள், எந்த நிபந்தனைகளும் எங்களைக் கட்டுப்படுத்தாது. டிடிவி தினகரனுக்கு தொண்டர்களின் ஆதரவு உள்ளது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு வந்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை எதிரிகளுக்கு நிலநடுக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று தெரிவித்துள்ளார்.