நீதியை குழிதோண்டி புதைக்க நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கிடைத்துள்ளது.... சீறும் நாஞ்சில் சம்பத்!
தமிழகத்தில் நீதியை ஆழகுழி தோண்டி புதைத்து விடலாம் என நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கிடைத்திருக்கிறது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நெல்லை : தமிழகத்தில் நீதியை ஆழகுழி தோண்டி புதைத்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு, ஐகோர்ட் தீர்ப்பு சம்மட்டி அடியாக தந்திருக்கிறது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் கூறியதாவது : 18 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்ததன் மூலம் சட்டப்பேரவை தலைவர் ஜனநாயகத்தை சிரச்சேதம் செய்வதற்கு துணிந்திருக்கிறார். சபாநாயகர், முதல்வர், ஆளுநர் ஆகியோர் சேர்ந்து இந்த ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் சபாநாயகர் தனபால் வரலாற்றுப்பழியை செய்திருக்கிறார்.
சபைக்கு வெளியே எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் கிடையாது. கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு வரவேற்பு தருகிறார்கள். சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தபோது அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆட்சி நீடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை.

கொடூரம்
ஆளுநர்கள் என்பதே மத்திய அரசின் கங்காணிகள்தான். மாநில மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக நடவடிக்கைக்கு ஆளுநர் செவி சாய்த்திருப்பது கொடூரமானது.

ஏன் நிரந்தர ஆளுநர் இல்லை
ஆளுநராக இருந்த ரோசையா மாற்றத்திற்கு பிறகு, நிரந்தர ஆளுநர் நியமிக்காதது ஏன்?. திட்டமிட்டே மத்திய அரசு நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்?

வரவேற்கிறேன்
திருச்சியில் தினகரன் தலைமையில் நடந்த நீட் எதிர்ப்பு கூட்டம், திருச்சியில் இதுவரை யாரும் காணாத கூட்டத்தால் திணறிப் போயுள்ளது. எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார்கள். நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளிக்கிறார்கள். இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கருத்தை வரவேற்கிறேன்.

காவிரி அழுக்காகிவிட்டது
முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் காவிரியில் நீராடியிருப்பதன் மூலம் காவிரி அழுக்காகிவிட்டது. செய்யக்கூடாத பாவங்களை செய்துவிட்டு எந்த தீர்த்தத்தில் குளித்தாலும் இவர்களுக்கு புண்ணியம் கிடைக்கப்போவதில்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications