எங்ககிட்ட வந்தா விமர்சனம் செய்ய மாட்டோம்...பிளேட்டை திருப்பி போடும் நாஞ்சில்
இரு அணிகளும் இணைந்த பிறகு எப்படி விமர்சனம் செய்ய முடியும் என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார்.
சென்னை: இரு அணிகளும் இணைந்த பிறகும் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை விமர்சிப்பீர்களா என்ற கேள்விக்கு இரு அணிகளும் இணைந்த பிறகு எப்படி விமர்சனம் செய்ய முடியும் என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார்.
டிடிவி தினகரனை அவரது பெசன்ட் நகர் வீட்டில் சந்தித்து விட்டு வெளியே வந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், டிடிவி தினகரன் தமிழர்களின் மான பெரும் மதில். இருண்டு கிடக்கும் இதய விளக்குகள் அவரால்தான் விடியும். தமிழகம் ஒரு நல்ல காலை பொழுதை சந்திக்க தினகரனால் மட்டுமே முடியும்.
தேர்தல் சந்திப்பது என்பது எத்தனை சிலுவைப்பாடு என்பது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும். எனவே மறுதேர்தல் நடைபெறுவதற்கு அவர்கள் வழிவிட மாட்டார்கள். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று டிடிவி தினகரன் இன்றே அவரது பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் பச்சை துரோகியான ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்தையோ சட்டரீதியாகவோ அணுகி அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டு விட்டது என்ற செய்தி வரக் கூடாது என்று நினைக்கிறேன்.
எங்கள் கட்சிக்குள் பேதமும், பிளவும் இல்லை. பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள். கட்சியையும் ஆட்சியையும் நல்வழிப்படுத்தியும், இரட்டை இலையை மீட்பதிலும் டிடிவி தினகரனின் செயல்பாட்டை காணும் மக்கள் வருங்காலத்தில் அவரை மதிப்பார்கள்.
கழக கிளை உறுப்பினர்கள் யாரும் தினகரனை சந்திக்கக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார். ஆனால் 31 சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் என சாரை சாரையாக தினகரனை சந்தித்து வருகின்றனர். இப்போது என்ன செய்ய போகிறார் ஜெயக்குமார்.
31 எம்எல்ஏ-க்கள் மட்டுமல்லாது அனைத்து எம்எல்ஏ-க்களின் மனதிலும் , சிந்தனையிலும் டிடிவி தினகரனே உள்ளார். சாதாரண மனிதராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு முடிசூட்டி அழகு பார்த்தவர்கள் சசிகலாவும், தினகரனும் என்பதால் இருவருக்கும் எதிராக நடந்து கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். இன்னும் 60 நாள்களுக்குள் இரு அணிகளும் இணையும். ஆனால் அவர்களது நிபந்தனைகள் நிறைவேறாது என்றார் நாஞ்சில் சம்பத்.
அதிமுக இணைந்த பிறகும் ஓபிஎஸ் அணியினரை இப்படிதான் கடுமையாக விமர்சிப்பீரா? என்ற செய்தியாளர்கள் கேட்டதற்கு, நம்ம கிட்ட வந்த பிறகு எப்படி விமர்சிக்க முடியும் என்றார்.