ரவுடிகளை ஒழித்தோம்.. அதற்கு மக்கள் கொடுத்த பரிசு இது.. நாராயணசாமி உற்சாகம்!
நெல்லித்தோப்பு தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரி: புதுவையில் 5 மாதகாலமாக தனது தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர் என்று நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் வெற்றி குறித்து நாராயணசாமி கூறியுள்ளார்.
நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் முதல்வரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,151 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி 18,709 வாக்குகளையும், ஓம்சக்தி சேகர் 7,526 வாக்குகளையும் பெற்றனர்.
புதுவையில் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தலில் போட்டியிடாத காரணத்தால் அவர் முதல்வர் பதவியேற்ற 6 மாதத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. நாராயணசாமி தேர்தலில் போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதிக்கு கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க. சார்பில் ஓம் சக்தி சேகர் உட்பட 8 பேர் போட்டியிட்டனர். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. மூன்று சுற்று முடிவுகள் 9.30 மணிக்கே வெளியானது. நாராயணசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை விட 11,151 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தனது தலைமையிலான 5 மாத ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர் என்றார். நெல்லித்தோப்பு தொகுதியில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியும். காங்கிரஸ் திமுக கூட்டணியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அபரிதமாக வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது போட்டியிட்ட ஜான்குமாரை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளேன். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். முன்பை விட புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதிகளின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.