செயற்கை சுவாசத்தில் நடராஜன்...பரோலில் வருவாரா சசிகலா
சென்னை: கவலைக்கிடமான நிலையில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடராஜனைக் காண சசிகலாவிற்கு பரோல் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடராஜனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனையில் அவரை பார்த்த டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கேட்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக வழக்கறிஞர்கள் பெங்களூரு சென்றுள்ளதாகவும் டிடிவி கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் நடராஜனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்தது. இதை தொடர்ந்து, சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
குடும்ப பஞ்சாயத்து
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா 5 நாள் பரோலில் வந்து, கணவரை பார்த்து சென்றார்.
கணவரை பார்க்க வந்த போது குடும்பத்தில் நிலவிய சொத்து பஞ்சாயத்துக்களையும் தீர்த்து விட்டு சென்றார்.
ஒரு மாத சிகிச்சைக்கு பின் நவம்பர் 2ம் தேதி நடராஜன் வீடு திரும்பினார்.
தப்பிய நடராஜன்
சொசுகு கார் வழக்கில் நடராஜனுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. எனினும் உடல்நிலையை காரணம் காட்டி சிறை செல்வதில் இருந்து தப்பினார். இந்நிலையில் சனிக்கிழமையன்று இரவு நடராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
நடராஜன் கவலைக்கிடம்
நடராஜனின் உறவினர்கள் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவே மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரோலுக்கு முயற்சி
டிடிவி தினகரன் மருத்துவமனைக்கு சென்று நடராஜன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடராஜனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறினார். பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கேட்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக வழக்கறிஞர்கள் பெங்களூரு சென்றுள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிக்கு பரோல்
சிறை தண்டனை கைதிகளுக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை தான் பரோல் வழங்கப்படும். கடந்த அக்டோபரில் சசிகலா பரோலில் வந்து சென்றார். எனவே அவர் கடைசியாக பரோலில் சென்று 5 மாதம் தான் ஆகிறது. எனவே, சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் கணவர் ஆபத்தான நிலையில் இருப்பதால், சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.