ஹுசைனி வழக்கில் சசிகலா கணவர் நடராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: கராத்தே வீரர் ஹூசைனி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம். நடராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக சிலை அமைக்க பேசிய தொகையை எம். நடராஜன் தராததால் நான் சிலை செய்து கொடுக்கவில்லை. இதுதொடர்பாக என்னை வீட்டுக்கு அழைத்து நடராஜன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் என்பது ஹூசைனியின் புகார்.
இந்த புகாரின் அடிப்படையில் நடராஜன் மற்றும் முள்ளிவாய்க்கால் முற்றம் அறக்கட்டளை நிர்வாகி இளவழகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் பின்னர் நடராஜனை 5 நாள் காவலில் எடுத்தனர் போலீசார். ஆனால் நடராஜன் ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறி ஒரே நாளில் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில் நடராஜன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை சைதாப்பேட்டை பெருநகர 11-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு சாந்தி முன் வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் மானுவேல், நடராஜனை ஜாமீனில் விட கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நடராஜன் தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட்டு சாந்தி, நடராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.