நடராஜனின் உடல்நிலை தேறி வருகிறது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
நடராஜனின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை : நடராஜனின் உடல்நிலை தேறி வருவதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடராஜனுக்கு உடல்நிலை குறைபாடு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கல்லீரலும், சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாக தெரியவந்தது.
இதனால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உறுப்பு தான மையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது உடல்நிலை மோசமாக இருந்து வருவதாக இரு முறை அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி நடராஜனுக்கு மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகளை தானமாகப் பெற்று கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் கூறுகையில், நடராஜனின் உடல்நிலை நன்கு தேறி வருகிறது.
அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடராஜனை பார்ப்பதற்காக அவரது மனைவி சசிகலா 5 நாள்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். அவர் இன்று மருத்துவமனைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.