அன்றே சொன்னோம்.... ஆத்தூருக்கு தூக்கியடிக்கப்பட்ட "நத்தம்" விஸ்வநாதன்... அக்னிபரீட்சையில் தேறுவாரா?
சென்னை: அதிமுக ஆட்சியில் சீனியர் அமைச்சர்களில் ஒருவரான நத்தம் விஸ்வநாதனை திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமிக்கு எதிராக நிறுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக ஒன் இந்தியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படியே நத்தம் விஸ்வநாதன் தற்போது ஆத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
(கருணாநிதி Vs காமராஜ்; ஸ்டாலின் Vs ஓபிஎஸ்; ஐ.பெரியசாமி Vsநத்தம்.. ஜெ. வியூகத்தால் அமைச்சர்கள் அலறல்)
அதிமுகவின் ஐவரணியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நத்தம் விஸ்வநாதன். தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி பல கோடிகளை அதிமுகவினரிடம் நத்தம் விஸ்வநாதன் வசூலித்த விவகாரம் அதிமுக தலைமைக்குப் போனது. அதனைத் தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் மீது விசாரணையை தொடங்கியது அதிமுக.
இந்த விசாரணையின் போதுதான், ஒவ்வொருமுறையும் ஆத்தூர் தொகுதியில் டம்மி வேட்பாளரை நிறுத்தி ஐ.பெரியசாமியை ஜெயிக்க வைக்கிறீர்களா? இந்த முறை நீங்களே போய் ஆத்தூரில் நிற்கனும் என ஜெயலலிதா எச்சரித்து அனுப்பியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. திமுகவின் ஆத்தூர் ஐ. பெரியசாமியுடன் திரைமறைவில் இணைந்து நத்தம் விஸ்வநாதன் பல பிசினஸ் செய்வதையும் அதிமுக தலைமை சுட்டிக்காட்டி எச்சரித்திருந்தது.
இதை நாம் அண்மையில் நமது இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஆத்தூர் தொகுதி வேட்பாளராக நத்தம் விஸ்வநாதன் நிறுத்தப்பட்டுள்ளார்.
நத்தம் தொகுதியில் ஷாஜஹான்; திண்டுக்கல்லில் மாஜி எம்.பி. சீனிவாசன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். நத்தம் விஸ்வநாதனின் குருநாதர் சீனிவாசன். ஆனால் நத்தம் கை ஓங்கிய நிலையில் சீனிவாசன் ஓரங்கட்டப்பட்டார். தற்போது நத்தத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மீண்டும் சீனிவாசனை களம் இறக்கியுள்ளது அதிமுக.
இத்தேர்தலைப் பொறுத்தவரையில் நத்தம் விஸ்வநாதனுக்கு அக்னி பரீட்சைதான்... இதில் அவர் தேறி அதாவது ஆத்தூரில் ஐ. பெரியசாமியை வீழ்த்தினால்தான் அரசியலில் அவரால் நீடிக்க முடியும். இல்லையென்றால் மாஜிக்கள் பட்டியலில் வைக்கப்பட்டு ஓரம்கட்டப்படும் நிலை ஏற்படும்.