கருணாநிதி Vs காமராஜ்; ஸ்டாலின் Vs ஓபிஎஸ்; ஐ.பெரியசாமி Vs'நத்தம்'.. ஜெ. வியூகத்தால் அமைச்சர்கள் அலறல்
சென்னை: ஏகப்பட்ட முறைகேடு புகார்களுக்கு உள்ளான அதிமுக ஐவரணியினர் மற்றும் அவர்களது ஆதரவு அமைச்சர்களின் அரசியல் 'சகாப்தத்தை' முடித்து வைக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் கருணாநிதிக்கு எதிராக அமைச்சர் காமராஜ்; முக ஸ்டாலினுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம்; ஐ.பெரியசாமிக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் என களமிறக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்று ஜெ. முதல்வரான பின்னர் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன், கே.பி.முனுசாமி ஆகிய அமைச்சர்களைக் கொண்ட ஐவரணி உருவானது. இந்த அணிதான் அதிமுக கட்சியிலும் ஆட்சியிலும் எல்லாமுமாக இயங்கியது.
பின்னர் இந்த ஐவரணியில் இருந்து கேபி.முனுசாமி கழற்றிவிடப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி ஐக்கியமானார். இந்த ஐவரணி அமைச்சர்கள் போட்ட ஆட்டத்தை ஆட்சியின் கடைசி காலத்தில் அண்மையில்தான் கவனித்தார் ஜெயலலிதா. அவர்கள் மீது கடும் பாய்ச்சல் காட்டி வருகிறார். இது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்ற புகார்கள் எழுந்தாலும் அதில் முழு உண்மையில்லை.உண்மையிலேயே அவர்கள் மீது தலைமை கடும் கோபத்தில் தான் உள்ளது.
அக்னி பரீட்சைத்தான்....
இந்நிலையில் தற்போது அதிமுகவில் ஐவரணி, நால்வரணி என தமக்கு இணையாக எந்த ஒரு அமைச்சரும் வலுவான நிலைக்கு வந்துவிடக் கூடாது என்ற வியூகத்தை வகுத்துள்ளாராம் ஜெயலலிதா. அத்துடன் இவர்களின் சகாப்தத்தையே அந்தந்த மாவட்டங்களில் ஒழிக்கும் வகையில் அதிரடியான தேர்தல் வியூகத்தை வகுத்திருக்கிறாராம் ஜெயலலிதா. நிச்சயம் இது ஒரு அக்னிப் பரீட்சைதான். இந்த அக்னி பரீட்சையிலும் அவர்கள் மீண்டால்தான் கட்சியில் தலைகாட்ட முடியும் என்ற நிலை உருவாகுமாம்.
இப்படி நிறுத்தினா...
இதன்படி திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டால் அவரை எதிர்த்து அந்த மாவட்ட அமைச்சரும் ஓபிஎஸ்சுக்கு மிக நெருக்கமானவருமான காமராஜ்; கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.
ஆத்தூர்- "நத்தம்" கூட்டணி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியை தன் வசம் வைத்திருக்கும் திமுகவின் துணைப் பொதுச்செயலர் ஐ.பெரியசாமியும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அண்மையில் ஜெ. நடத்திய விசாரணையில் ஐ.பெரியசாமியின் உறவினர் ஒருவர்தான் நத்தம் விஸ்வநாதனுக்கு பக்க பலமாக இருந்து வருவது தெரியவந்ததாம். மேலும் இருவருக்கும் இடையே உள்ள ரகசிய டீல்களும் தலைமைக்கு தெரியவந்துள்ளதாம்.
அலறும் நத்தம்
இதனால் இந்த முறை ஆத்தூர் தொகுதியில் நீங்கள்தான் போட்டியிட்டு ஜெயித்தாக வேண்டும்; ஒவ்வொருமுறையும் ஐ.பெரியசாமிக்கு எதிராக டம்மி வேட்பாளரை போட்டு ஜெயிக்க வைத்தீர்கள்தானே.. தற்போது அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடுங்கள் என கட்டளை பிறப்பித்துவிட்டாராம் ஜெ. ஆத்தூர் தொகுதியில் கணிசமாக இருக்கும் ஒக்கலிகா கவுடர்கள், ஐ.பெரியசாமியின் தீவிர ஆதரவாளர்கள். இதனால் நாம் போட்டியிட்டால் நிலைமை என்னாகுமோ? என அலறிப் போயுள்ளாராம் நத்தம். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் விஸ்வநாதனின் குருநாதர் சீனிவாசன் இப்படிதான் ஒரு காலத்தில் கோலோச்சி கொண்டிருந்தார். ஆனால் அவரை ஓரம்கட்டி ஜெ. ஒதுக்க அந்த இடத்தில்தான் நத்தம் அமர்ந்தார். தற்போது நத்தம் விஸ்வநாதனின் சாம்ராஜ்யத்துக்கும் முடிவு கட்டுவதில் ஜெ. தீவிரமாக இருக்கிறாராம்.
சவுமியா vs பழனியப்பன்
இதேபோல் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் மனைவி சவுமியாவும் இந்தத் தேர்தலில் தர்மபுரி அல்லது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. அவர் போட்டியிடும் தொகுதியில் அமைச்சர் பழனியப்பனை நிறுத்தப் போகிறாராம் ஜெ. என்கின்றன அதிமுக வட்டாரங்கள். இப்படிச் செய்வதால் இவர்களது அரசியல் வாழ்க்கை கடினமானதாக மாறுவது ஒரு பக்கம் நடந்தாலும், மறுபக்கம் இந்தத் தொகுதிகளின் வெற்றியை நாமாக இழக்க வேண்டுமா என்ற கேள்வியும் அதிமுகவில் எழுந்துள்ளதாம். இதனால் இன்னொரு பிளானும் இருப்பதாக சொல்கிறார்கள்.
இதுவும் நடக்கலாம்
அதன்படி இந்த அமைச்சர்கள் எவருக்குமே சீட் தராமல் ஆளுக்கு ஒரு மண்டலத்தைப் பிரித்து கொடுத்து அந்த வேட்பாளர்கள் ஜெயிக்க வைத்து விட்டு வாருங்கள், இல்லாவிட்டால் அப்படியே ஊர் பக்கம் போய் சேருங்கள் எனவும் ஜெ. உத்தரவிட வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். மொத்தத்தில் இவர்களுக்கு 2016 தேர்தல் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அனுபவமாக மாறப் போவது மட்டும் மிக நிச்சயம்.