ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு
டெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நாளுக்கு நாள் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவர் அபிஜீத் விரைவில் டெல்லிக்கு வரும் சூழலில், அங்கு ஏர்போர்ட்டில் வைத்தே அவரை கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சம் தனது குடும்பத்தினருக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். இருந்தாலும் கைதுக்கு அஞ்சாமல் போராட்டம் தொடரும் எனவும் அவர் அறிவித்தார்.
இந்தியாவின் தற்போதைய அரசியல் போக்கை மாற்றியமைப்போம் என்ற முழக்கத்துடன், ஆன்லைனில் மிகப் பெரிய அலையை உருவாக்கி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தங்களின் அடுத்தகட்ட அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வாரம் தேசிய தலைநகரான டெல்லியில் ஒரு மாபெரும் அமைதிப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ள இந்த அமைப்பு, தங்களின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொடர்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கைது
வரும் ஜூன் 6ம் தேதி இந்தியாவில் கல்வி அமைப்புகளில் உள்ள குளறுபடிகள் தொடர்பாகப் போராட்டங்கள் நடைபெற உள்ளது. இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே இது தொடர்பாகக் கூறுகையில், "நான் டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கும் போதே, என்னை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து விடுவார்களோ என்று எனது குடும்பத்தினரும் நண்பர்களும் கடும் கவலையில் இருக்கிறார்கள். ஆனால், நமது நாடு இன்னும் ஒரு ஜனநாயக நாடுதான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த எங்களுக்கு நிச்சயம் அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன்.
பயம் இல்லை
நான் காந்தி, அம்பேத்கர், பகத் சிங் மற்றும் நேரு ஆகியோரின் கொள்கைகளைப் பின்பற்றுபவன். எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சுரிமையை உத்தரவாதப்படுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நான் மதிக்கிறேன். இதற்காக ஜெயிலுக்கு போக நேர்ந்தாலும் சரி, அதற்கு நான் தயார்! நாம் இன்னும் எவ்வளவு காலம்தான் பயந்து கொண்டே வாழப் போகிறோம்? இந்த நாடு எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் மட்டும் சொந்தமானது அல்ல.. இது நம் எல்லோருடைய நாடு! நமது எதிர்காலம் சீரழிக்கப்படும் போது, அதற்கு எதிராக அமைதியான, ஜனநாயக வழியில் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுப்பது நமது கடமை" என்றார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இதுவரை ஆன்லைன் வாயிலாக மட்டுமே இயங்கி வந்த நிலையில், இப்போது முதல்முறையாகப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே டெல்லி போராட்டத்திற்கு முன்பாக இந்த ஆன்லைன் இயக்கம் தங்களை ஒரு முறையான அமைப்பாக மாற்றும் நோக்கில், மூன்று முக்கியப் புள்ளிகளைத் தங்களின் செய்தித் தொடர்பாளர்களாகக் களமிறக்கியுள்ளது.
செய்தித்தொடர்பாளர்கள்
பிரபலப் புலனாய்வு பத்திரிகையாளரான சௌரவ் தாஸ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான விஜேதா தஹியா, அமைப்பின் மற்றொரு செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலாண்மை ஆலோசகராக இருந்து, தற்போது பொதுக் கொள்கை விமர்சகராக இருக்கும் அசுதோஷ் ரங்காவும் செய்தித் தொடர்பாளராகச் செயல்படுவார்.
இந்த 3 பேர் கொண்ட குழுதான் இனி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கொள்கைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும். மேலும், ஊடகங்களையும் இவர்களே எதிர்கொள்வார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் விவாதங்களின் போக்கையும் மாற்றுவதே தங்களின் நோக்கம் என்றும், இந்த புதிய தலைமுறைத் தலைவர்கள் மூலம் அது சாத்தியமாகும் என்றும் அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் மத்தியில் ஆன்லைனில் ட்ரெண்டாகி வரும் இந்தக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நடத்தவிருக்கும் போராட்டம், தேசிய அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications