தோண்ட தோண்ட பூதம்... ரூ250 கோடி வங்கி கடன் மோசடியில் நாதெள்ளா ஜூவல்லர்ஸ்!
நாதெள்ளா ஜூவல்லர்ஸ் நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை: கனிஷ்க் நிறுவனத்தை அடுத்து நாதெள்ளா ஜூவல்லர்ஸ் நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 250 கோடி கடன் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது.
சென்னை உஸ்மான் சாலையில் உள்ள கனிஷ்க் நிறுவனம் ரூ. 824 கோடியை கடனாக பெற்றுவிட்டு மோசடி செய்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி புகார் அளித்துள்ளது. இந்நிலையில் அதன் உரிமையாளர் பூபேஷ் குமார் தலைமறைவாகிவிட்டார்.
அந்த வரிசையில் நாதெள்ளா நிறுவனமும் சிக்கியுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.250 கோடி கடனை பாரத ஸ்டேட் வங்கியில் பெற்று அதை திருப்பி செலுத்தவில்லை .

சிபிஐக்கு புகார்
இதையடுத்து நாதெள்ளா நிறுவன உரிமையாளர் ரங்கநாத குப்தா அவரது மகன்கள் பிரபன்ன குமார், பிரசன்ன குமார் மற்றும் உறவினர் கோட்டா சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி சிபிஐக்கு புகார் கடிதம் அளித்துள்ளது.

75 கோடி மோசடி
இந்நிறுவனத்தில் நகை சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்து வருகின்றனர். நாதெள்ளா நிறுவனம் சுமார் 210 பேரிடம் ரூ.75 கோடி நகை சீட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது என்பது கடந்த ஆண்டு எழுந்த புகாராகும்.

4 மாதங்களுக்கு முன்பே புகார்
இதனால் தமிழகத்தில் 7 கிளைகளை நடத்த முடியாமல் அந்நிறுவனம் மூடிவிட்டது. கனிஷ்க் தொடர்பான புகாரை போல் நாதெள்ளா மீதான புகாரையும் எஸ்பிஐ வங்கி கடந்த 4 மாதங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணை
ஆனால் இதுவரை யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இந்த விவகாரம் வெளி வந்த நிலையில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் எந்தெந்த தொழில் நிறுவனங்களுக்கு எஸ்பிஐ வங்கி கடன் கொடுத்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications