தேசிய அளவிலான கூட்டணி குறித்து தேர்தலுக்குப் பின் முடிவு -மு.க.ஸ்டாலின்
சென்னை: தேசிய அளவிலான கூட்டணி குறித்து தேர்தலுக்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி முடிவெடுப்பார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி கொடுத்துள்ளார்.
அந்தப் பேட்டியில் தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பேட்டியிலிருந்து...
அரசியல் சூழ்நிலை
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து தங்கள் பார்வை என்ன? உங்கள் முன்னாள் கூட்டணி கட்சியான காங்கிரஸின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளதாக மீடியாக்கள் கூறியுள்ள நிலையில் தி.மு.க வின் எதிர்கால அனுகுமுறை எப்படி இருக்கும்?
மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்கமுடியும் என்கிற சூழல் 1989ல் தொடங்கி கடந்த 25 வருடங்களாக நீடித்து வருகிறது. இன்றைய சூழ்நிலையிலும் மாநில கட்சிகளே தேசிய அரசியலை நிர்ணயிக்கும். ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் டெல்லியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் இடத்தில் கலைஞர் தொடர்ந்து இருந்து வருகிறார்.
பிரதமர்களை உருவாக்கியவர்
1989-ல் வி.பி.சிங், 1996-ல் தேவகவுடா, பின்னர் ஐ.கே.குஜ்ரால் போன்றோர் பிரதமரானதற்கு கலைஞர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். அதன் பிறகு 1999-ல் தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பில் வாஜ்பாய் அவர்கள் நிலையான அரசை நடத்துவதற்கும், 2004 மற்றும் 2009ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் நிலையான ஆட்சி அமைவதற்கும் தலைவர் கலைஞர் துணை நின்றார். 1970 களிலேயே இந்திராகாந்தி அம்மையாரின் நிலையான ஆட்சிக்கு துணை நின்றார்.
சுயநலக் கட்சிகள்
இதில் பல கட்சிகளும் அதன் தலைமைகளும் சுயநலத்துடனும் அதிகார வெறியுடனும் பிரதமர் கனவுடனும் இருக்கின்றன. அவர்களுக்கிடையே மோதல்களும் நிலவுகின்றன. நாட்டு நலனுடன் ஒரு நிலையான மதசார்பற்ற அரசு மத்தியில் அமைவதே இந்தியாவுக்கு நல்லது. அத்தகைய அரசு மத்தியில் அமைவதற்கு தி.மு.க ஏற்கனவே வழிகாட்டியிருக்கிறது. துணை நின்றிருக்கிறது. இப்போதும் அதுபோலவே செயல்படும்.
தேசியக் கட்சிகளை நம்பி நாங்கள் இல்லை
மத்தியில் "நிலையான ஆட்சிக்கு" ஆக்கபூர்வமான ஆதரவு அளிப்பது தி.மு.க என்ற இமேஜ் தேசிய அரசியலில் இருப்பதால், அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் கலைஞர் முக்கியப் பங்கு வகிப்பார். மேலும் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். தமிழக கட்சிகளின் தயவுதான் தேசிய கட்சிகளுக்குத் தேவைப்படுகிறதே தவிர, தேசிய கட்சிகளால் இங்கு மாநிலக் கட்சிகள் வெற்றிபெறும் சூழல் இல்லை. எனவே தேசிய கட்சிகளை நம்பி தி.மு.க இல்லை.
காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவீர்களா
காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் நடந்ததை மறந்துவிட்டு தி.மு.க தொண்டர்கள் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவார்களா?
தமிழர்களின் உணர்வுடன் தொடர்புடைய ஈழப் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை ஆகியவற்றில் மத்தியில் உள்ள காங்கிரஸ் நடந்து கொண்ட விதம் கழகத்தினர் அனைவருக்கும் அதிருப்தியைத் தந்திருக்கிறது. கழகத்தின் கடைசி தொண்டனின் மனநிலையையும் உணர்ந்தே கூட்டணி பற்றிய தெளிவான முடிவை தி.மு.க. பொதுக்குழு ஏற்கனவே எடுத்திருக்கிறது. அதை கலைஞர் அறிவித்திருக்கிறார். கலைஞர் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படக்கூடியவர்கள்தான் கழகத் தொண்டர்கள். ஆகவே யூகத்தின் அடிப்படையிலான உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது.
திமுகவும் பலமானது, கூட்டணியும் பலமானது
திமுக கூட்டணி பலமானதா? கூட்டணியை தேடி அலையாமல் தி.மு.கவை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்களா?
தி.மு.கவும் பலமானது. அதன் கூட்டணியும் பலமானது. ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை எல்லாம் தண்டி எங்கள் வேட்பாளர் பெற்ற வாக்குகள் தி.மு.க. பலமாக இருப்பதை பறைசாற்றியிருக்கிறது. அப்படிப்பட்ட பலமான தி.மு.க. தேசியகட்சிகள் இல்லாத வலுவான கூட்டணியையும் உருவாக்கியிருக்கிறது.
பெரும் வெற்றி பெறும்
இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெரும். மேலும், ஜெயலலிதா அரசின் நிர்வாக சீர்கேடும், அதனால் மக்கள் அடைந்துள்ள ஏமாற்றமும் எங்கள் கூட்டணிக்கு பலம் சேர்க்கின்றன.
இலவசத் திட்டங்கள்
அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி விட்டு இப்போது மீண்டும் அதிமுக இலவச திட்டங்களை அறிவித்திருக்கிறது.? அதற்கு போட்டியாக நீங்களும் அறிவிப்பீர்களா?
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்தையும் நாங்கள் ஆட்சியில் இருந்த போது நிறைவேற்றியிருக்கிறோம். அதை எங்கள் "சாதனை சரித்திரம்" சொல்லும். கலைஞர் அரசின் திட்டங்களால் தமிழ்ச் சமுதாயம் தனது கல்வி-பொருளாதார-சமூக நிலைகளில் மேம்பாடு அடைந்தது. பெண்கள் எவரையும் எதிர்பார்க்காமல் தங்கள் சொந்தக் காலில் நிற்கும்படியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அளித்த வாக்குறுதிகளுக்கும் அதிகமாகவே பல திட்டங்களை நிறைவேற்றியது கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு. ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட மாட்டாது.
சொன்னதைச் செய்யாது அதிமுக
ஒரேயொரு உதாரணத்தைச் சொல்கிறேன். 2011 சட்டமன்றத் தேர்தலின் போது இளைஞர்களை ஏமாற்ற 87 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தார் ஜெயலலிதா. இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 2011ல் இருந்து மூன்று வருடமாக "வாக்குறுதிகளாக" தேர்தல் அறிக்கையிலேயே அது அப்படியே உறங்கிக் கொண்டிருக்கிறது.
ஜெ.வுக்கு அளிக்கும் வாக்கு நிலையற்ற ஆட்சிக்கே
ஜெயலலிதா பிரதமர் வேட்பாளர் என்று தன்னை முன்னிருத்துவது அதிக வாக்குகளை பெற்று தருமா?
ஜெயலலிதாவிற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மத்தியில் நிலையற்ற ஆட்சிக்கு அளிக்கும் வாக்கு என்பதை தமிழக மக்கள் மிக நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள். 1999-ல் பிரதமராக இருந்த வாஜ்பாயை அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக சொல்லி தினந்தோறும் மிரட்டிவந்தார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜெ.
வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தபிறகு நடைபெற்ற மூன்று பாராளுமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அதே நிலைமைதான் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஜெயலலிதாவிற்கு நேரிடும்.
தீர்ப்பு நெருங்குகிறது
"ஊழல் என்ற வார்த்தையே இல்லை என்ற சூழ்நிலை உருவாக்க பாடுபடுவோம்" என்று இப்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள ஜெயலலிதா மீது பெங்களூரில் சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. அது தவிர வருமான வரி செலுத்தாத வழக்கு, பரிசுப் பொருள் வாங்கிய வழக்கு எல்லாம் ஜெயலலிதாவிற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த வழக்குகள் எல்லாமே தீர்ப்புக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
எப்படி ஏற்பார்கள் ஜெயலலிதாவை
ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவை முலயாம் சிங்கோ, நிதிஷ்குமாரோ- எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள். குடியரசு தலைவர் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பைரோன் சிங் செகாவத்துக்கு தன் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ க்களை ஓட்டு போட வைத்து நம்பகத்தன்மை இழந்தவர். கூட்டணி தர்மத்தை மீறியவர், நம்பகத்தன்மையற்றவர், ஆட்சியை சுயநலத்திற்காக கவிழ்ப்பவர் என்கிற இமேஜுக்கு சொந்தக்காரார் ஜெயலலிதா.
அனவுன்ஸ்மென்ட் ஆட்சி
ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கைத்தவிர வேறு எதுவும் மக்களிடம் அதிருப்தி இல்லை. அவருக்கு எதிராக எப்படி பிரச்சாரம் செய்யப்போகிறீர்கள்?
ஜெயலலிதா மீது அதிருப்தி இல்லை என்று சொல்வது தவறு. தமிழகத்தில் "வெறும் அனவுன்ஸ்மென்ட் ஆட்சிதான்" மூன்று வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா அரசு வெளியிட்ட அறிவிப்புகள் கடந்த மூன்று வருடங்களில் 3601. அவற்றுள் 2013 டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை 2695 அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் "வெறும் அறிவிப்புகளாகவே" கிடக்கின்றன.
செயலிழந்து கிடக்கிறது அரசு
இவையெல்லாம் இந்த அரசு செயலிழந்து கிடப்பதை காட்டுகிறது. சட்டமன்றத்தில் ஜனநாயக விரோத போக்கு, ஊழல் நிர்வாகம், வேலைவாய்ப்பிண்மை,சீர்கெட்டு கிடக்கும் சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு, பொருளாதார வீழ்ச்சி, உள்ளிட்டவைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வோம்.
தேர்தலுக்குப் பிறகு தேசிய கூட்டணி
தேசிய கட்சிகளுடன் கூட்டணியை மீண்டும் பரிசீலிக்க வாய்ப்பிருக்கிறதா?
தமிழக நலனை மனதில் வைத்தும், இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றவும்தான் தலைவர் கலைஞர் எப்போதுமே தேசிய அளவில் கூட்டணி வைப்பார். ஆகவே தேர்தலுக்குப் பிறகு அது பற்றி கலைஞர் முடிவு எடுப்பார் என்றார் மு.க.ஸ்டாலின்.