வேலையை விட்டு தூக்க முடிவு.. கடற்படை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூத்த அதிகாரி
இந்திய கடற்படையில் தனக்கு கீழ் வேலை பார்த்த வீராங்கனைகளுக்கு மூத்த கடற்படை அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரிய பிரச்சனை ஆகியுள்ளது.
சென்னை: இந்திய கடற்படையில் தனக்கு கீழ் வேலை பார்த்த வீராங்கனைகளுக்கு மூத்த கடற்படை அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. தற்போது இந்த மூத்த அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட உள்ளார்.
இந்தியாவை சேர்ந்த 6 கடற்படை வீராங்கனைகள் உலகம் முழுக்க சுற்றிவந்து சமீபத்தில் சாதனை படைத்தனர். ஆனால் இதை கொண்டாடிக்கொண்டு இருக்கும் நேரத்தில்தான், சென்னையில் கடற்படை வீராங்கனைகள் இருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் கொடூரம் நடந்துள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள, கடற்படையின் ஐஎன்எஸ் பருந்து விமான தளத்தில் பணியாற்றி வந்த இரண்டு கடற்படை வீராங்கனைகளுக்குத்தான் இந்த பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் உயரதிகாரியே பாலியல் ரீதியாக பலமுறை அவர்கள் இருவருக்கும் தொல்லை கொடுத்துள்ளார்.
பணியில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கொடுப்பதாக அழைத்து பாலியல் ரீதியாக சீண்டி இருக்கிறார். இவர்கள் மூவரின் பெயரும் வெளியிடப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட மூத்த கடற்படை அதிகாரி மீது ஏற்கனவே அவர் மனைவி குடும்பநல நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இதிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மூத்த அதிகாரி மீது, அந்த இரண்டு வீராங்கனைகளும் துறை ரீதியாக புகார் அளித்துள்ளனர். இதற்காக சென்னையில் கடற்படை தளத்தில் அந்த மூத்த அதிகாரி விசாரிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே பல வீராங்கனைகளுக்கு இப்படி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
தற்போது இவரை பணியில் இருந்து நீக்கும் படி விசாரணை அதிகாரிகள் கடற்படைக்கு பரிந்துரை செய்துள்ளனர். விசாரணை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் அவர் விரைவில் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட உள்ளார்.