என்னா ஒரு அரசியல் ராஜதந்திரம்... மாற்றுக்கட்சியினருக்கு பொறுப்பு தந்து அழகு பார்த்த தமிழிசை!
அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் சேர்ந்துள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கியுள்ளார்.
சென்னை : அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி வந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்புகளை நியமித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் விதமாக ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் வளைக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டது. இதன் முதல் வெற்றியாக கடந்த ஆண்டு டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பாஜகவில் இணைந்த மாஜிக்கள்
அவருடன், அ.தி.மு.க-வில் இருந்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் ஆகியோரும் பா.ஜ.க-வில் இணைந்தனர். இதே போன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ், காங்கிரஸ் மாஜி எம்பி கார்வேந்தன் உள்ளிட்டோரும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மாநிலத் துணைத் தலைவராக நியமனம்
இவர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நயினார் நாகேந்திரனுக்கு மாநில துணைத் தலைவர் மற்றும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராமதாஸ், கார்வேந்தனுக்கும் பொறுப்பு
டாக்டர் எஸ்எஸ்ஆர். ராமராஸிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் கடலூர் சட்டமன்ற தொகுதி இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாஜி எம்பி கார்வேந்தன் மாநிலத் தலைவர் ஓபிசி அணி மற்றும் ஆரணி தொகுதி இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
புதிய பொறுப்பாளர்கள் 14 பேர்
வேலூர் மாஜி மேயர் கார்த்தியாயினி மாநிலச் செயலாளர், மகளிர் அணி மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி இணைபொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போன்று மாற்றுக் கட்சியின் இருந்து வந்த மொத்தம் 14 பேருக்கு இணை பொறுப்பாளர்கள், மாநிலத்துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல் ராஜதந்திரம்
எல்லா அரசியல் கட்சியினர் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை தக்கவைத்துக் கொள்ள புதிய பொறுப்புகளை அவர்களுக்கு வழங்கி குஷிபடுத்துவார்கள். அதே பாணியில் தமிழிசையும் தனது அரசியல் ராஜதந்திரத்தை இதில் காட்டியுள்ளார். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுகவில் இருந்து விலகி வந்தவர்களுக்கு தொகுதிகளுக்காக பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளதும் இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.












Click it and Unblock the Notifications