திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க தேசியவாத காங்கிரஸ் முடிவு
மதுரை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் ஆறு கட்சிகளை அங்கீகாரம் செய்துள்ளது. அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஒன்று. வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதாம்.
கடந்த சட்டசபைத் தேர்தலில், திமுக கூட்டணியில்தான் இக் கட்சி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இக் கட்சி திமுக கூட்டணியிலேயே போட்டியிட விரும்புகின்றதாம்.
இக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராகவும், தமிழக தலைவராகவும் டாக்டர் ராஜேஸ்வரன் உள்ளார். இவர் காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரம் தொகுதி எம்.பியாகவும், சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர்.
வரும் தேர்தலிலும் ராஜேஸ்வரனே ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.