நெடுவாசலில் 19-வது நாளாக தொடரும் போராட்டம்! பேச்சுவார்த்தைக்கு மீண்டும் ஆட்சியர் அழைப்பு!
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் 19-வது நாளாக போராட்டம் தொடருகிறது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 19-வது நாளாக இன்று திங்கள்கிழமையும் போராட்டம் தொடருகிறது. இந்த போராட்டத்தைக் கைவிடும் பேச்சுவார்த்தையை மாவட்ட ஆட்சியர் கணேஷ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், கோட்டைக்காடு, வடகாடு உள்ளிட்ட பல கிராமங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கோட்டைக்காடு கிராம மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆனால் நெடுவாசலில் 19-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. வடகாடு கிராம மக்கள், மாவட்ட ஆட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நெடுவாசல் போராட்டக் குழுவை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நேற்றும் மாவட்ட ஆட்சியர் கணேஷ் அழைப்பு விடுத்தார். ஆனால் மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக உறுதி மொழி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிட முடியும் என்பதில் நெடுவாசல் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.
இதனால் நெடுவாசல் போராட்டம் அவ்வளவு எளிதாக ஓயாது என்றே தெரிகிறது.