ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம்: நெடுவாசலில் இன்று 70 கிராம மக்கள் முக்கிய முடிவு
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை திருப்பும் வகையில் நெடுவாசலை சுற்றியுள்ள 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது.
நெடுவாசல் கிராம மக்கள் மற்றும் மாநில அரசு ஒப்புதலின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று கூறிய மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தத்தை போட்டது. இதனை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
போராடும் மக்களை மத்திய, மாநில அரசுகள் புறக்கணித்து வருவதாக அந்த பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவில்லை என்பதால் கவன ஈர்ப்பு நூதன போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒப்பந்தம் போட்டுள்ள ஜெம் நிறுவனம் விவசாயிகளின் நிலம் குத்தகை ஒப்பந்தத்தை தங்கள் நிறுவன பெயருக்கு மாற்றித் தரக் கோரியுள்ளது. இதனால் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நெடுவாசல் போராட்டக் குழுவினர் அடுத்து மிகப் பெரிய போராட்டம் நடத்துவது குறித்து நெடுவாசலை சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களுக்கு சென்று மக்களிடம் ஆதரவு கேட்டுள்ளனர். 70 கிராம பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கீரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
அமைதியாக இருக்கும் அரசுகளை எதிர்த்து நாள்தோறும் ஒவ்வொருவிதப் போராட்டத்தை நெடுவாசல் கிராமத்தினர் நடத்தி வரும் நிலையில் இக்கூட்டத்திற்கு பின்னர் தீவிரமடையும் என கூறப்படுகிறது.