ஹால் டிக்கெட்டில் குழப்பம்.. “போச்சே”! முகவரி சரியாக இல்லாததால் நீட் எழுத முடியாமல் கதறிய மாணவர்கள்!
சேலம்: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் தருமபுரி என்று குறிப்பிடாமல் சேலம் பைபாஸ் சாலை என்று குறிப்பிட்டிருந்ததால், குழப்பம் அடைந்து சில மாணவர்கள் சேலம் சென்றனர். அவர்களது தேர்வு மையம் அங்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால் பேருந்து ஏறி தருமபுரிக்கு வந்தும் கூட, 2 மாணவர்களை உரிய நேரத்தில் வரவில்லை எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஹால் டிக்கட்டில் முகவரி இடத்தில் அரசு கலைக்கல்லூரி, சேலம் மெயின் ரோடு என மட்டும் போடப்பட்டிருந்ததால் தர்மபுரி தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டிய மாணவர்கள் சேலம் அரசு கலைக்கல்லூரி தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

நீட் தேர்வு முடிந்தது
மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வினை சேலம் மாவட்டத்தில் 22 மையங்களில் 9,731 மாணவர்கள் எழுதினர். முன்னதாக நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த 30ஆம் தேதி ஆன்லைன் மூலம் கிடைக்கப் பெற்றனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணி முதலே , நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவிகள் தங்களது ஹால் டிக்கெட், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் அவரவர்களுடைய தேர்வு மையத்திற்கு பெற்றோருடன் வந்தனர். இந்த நிலையில் காலை 11.30 மணி முதல் தேர்வு மையத்திற்கு வந்திருந்த மாணவ , மாணவிகளை நுழைவாயிலேயே தடுப்பு அமைத்து ஆவணங்கள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்த பிறகு உள்ளே அனுமதித்தனர்.
கடும் கட்டுப்பாடுகளால் மன உளைச்சல்
குறிப்பாக தேர்வர்கள் முழுக்கை ஆடை, தங்க நகைகள், கம்மல், காப்பு , கைகடிகாரம் , கூலிங் கிளாஸ் ஆகியவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சேலம் அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகளின் சுடிதாரில் பட்டன் வைத்திருந்ததால், அவர்களை மாற்று ஆடை அணிந்து வர வெளியே அனுப்பினர். உடன் வந்த பெற்றோர் மாற்று உடை ஏற்பாடு செய்து தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்தனர்.
ஹால் டிக்கெட்டால் குழப்பம்
இதனிடையே சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள் சிலரின் ஹால் டிக்கெட்டில் அரசு கலைக் கல்லூரி சேலம் பைபாஸ் ரோடு மற்றும் பின்கோடு மட்டும் முகவரி இடத்தில் அச்சிடப்பட்டிருந்ததால் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு வந்தனர். அப்போது அவனை சரிபார்த்த தேர்வு கண்காணிப்பாளர்கள், அது தர்மபுரி அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்திற்கான ஹால் டிக்கெட் எனக் கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.
சேலம் இல்லை, தருமபுரி
அதனால் அந்த மாணவர்களும் பெற்றோரும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர். சில மாணவர்கள் 12 மணிக்கு உள்ளாகவே சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு வந்ததால் அவர்கள் உடனடியாக தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூன்று மாணவர்கள் 12:30 மணி அளவில் சேலம் அரசு கலை கல்லூரிக்கு வந்த போது அவர்களுடைய தேர்வு மையம் தருமபுரி எனக்கூறியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை
இதேபோல பத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தருமபுரி என மாவட்டத்தின் பெயரை குறிப்பிடாததால், சேலம் அரசு கலை கல்லூரிக்கு வந்து பின்னர் தருமபுரிக்கு திரும்ப வேண்டிய சிரமம் ஏற்பட்டது. சிலர் கடைசி நேரத்தில் வந்ததால் தருமபுரிக்கும் செல்ல முடியாமல் சேலத்திலும் எழுத முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அவர்கள் பெற்றோரும் பதற்றமடைந்தனர்.
அவர்களது தேர்வு மையம் அங்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால் பேருந்து ஏறி தருமபுரிக்கு வந்தும் கூட, சில மாணவர்கள் உரிய நேரத்தில் வரவில்லை எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் தேர்வை எழுத முடியாததால் ஏமாற்றத்தோடு காத்திருந்துவிட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications