நீட் முதல் நெடுவாசல் வரை... டெல்லி காலடியில் நெடுஞ்சானாக விழுந்து அடிமைசாசனம் தந்த அதிமுக அரசு
அதிமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துவிட்டது. இந்த ஆட்சி செய்த பெரும் சாதனையே நீட் தேர்வு முதல் நெடுவாசல் வரை தமிழகத்திற்கான உரிமையை டெல்லியின் காலடியில் வைத்துவிட்டு நெடுஞ்சான்கிடயாக விழுந்து கி
சென்னை: தமிழகத்தில் அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்த ஓராண்டில் சாதனையென்று எதுமில்லை.
எம்ஜிஆருக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக.
முதல் 4 மாதங்கள் ஜெயலலிதா தமிழகத்தை ஆண்டார் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ நகர்ந்தது என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. அதற்கப்புறம் கேட்கவா வேண்டும்.
சாதனையா வேதனையா
அப்பல்லோவில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5ல் மரணமடைந்தார். ஜெயலலிதாவிற்குப் பின்னர் ஓபிஎஸ், பழனிச்சாமி என இரண்டு முதல்வர்கள் மாறிவிட்டனர். இந்த ஓராண்டில் ஒரு சாதனையும் இல்லை.
நீட் தேர்வு
இந்த ஓராண்டிற்குள் தமிழக மாணவர்களின் அதி முக்கிய பிரச்சனையான நீட் தேர்வு ஊத்தி மூடப்பட்டுவிட்டது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை அவசர காலகட்டத்தின் போது மத்திய பட்டியலுக்கு சென்றது. என்றாலும் மாநில அளவிலான கல்வி முடிவுகளை மாநில அரசே எடுத்துக் கொண்டது.
மாணவர்களின் எதிர் காலம்
ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று சட்டசபையில் சட்ட இயற்றி அனுப்பியும் அதற்கான ஒப்புதலை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்தது. மாநில முதல்வர் டெல்லிக்கு சென்று நீட் தேர்வு குறித்து பிரதமரை சந்தித்து பேசி இருக்க வேண்டாமா? பிரச்சனைக்கு தீர்வு காணாமல் சிரித்து பேசிவிட்டு வந்துவிட்டார். நீட் தேர்வு விஷயத்தில் பிரதமர் மோடி நினைத்தது நடந்தது. இதனால் பாழாகப் போவது தமிழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்களின் எதிர் காலம்தான்.
40 நாள் நெடுவாசல் போராட்டம்
அதே போல்தான் நெடுவாசல் பிரச்சனையும் அந்தோ கதி என்று நடுரோட்டில் நின்று இன்றும் நெடுவாசல் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 40 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் தற்காலிகமாக நெடுவாசல் மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை நிறுத்தி வைத்தனர்.
எரிவாயு எடுக்க ஒப்பந்தம்
ஆனால், என்ன செய்தது மத்திய அரசு? எப்போது மக்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்து, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனத்திடம் எரிவாயுவை எடுத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டது.
வழிந்து வழிந்து பேசி..
இதற்கெல்லாம் என்ன செய்தது தமிழக அரசு. ஒன்றுமே இல்லை. அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள் எல்லோருமே மோடியை சந்தித்து வழிந்து வழிந்து பேசிவிட்டு வந்தார்களே ஒழிய, நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்சனைகளை குறித்து வாயும் திறப்பதில்லை.
மாநில சுயாட்சி
மோடியை பார்க்கும் போது, ஜெயலலிதாவிடம் குனிந்து வணக்கம் சொல்வது போன்று இல்லாவிட்டாலும் அதில் பாதியாவது குனிந்துதான் மோடியிடம் பேசிவிட்டு வருகிறார் நமது முதல்வர் பழனிச்சாமி. இவர்களுக்கெல்லாம் மாநில சுயாட்சி பற்றியோ, மாநில அரசுக்கு என்று ஒரு அதிகாரம் இருக்கிறது என்பது பற்றியோ தெரியுமா என்று கூட தெரியவில்லை.
உடனுக்குடன் பலன்
பாஜகவினருக்கும் மத்திய அரசுக்கும் பணிந்து போவதால் இந்த நேரத்திற்கான பலனை வேண்டுமானால் பழனிச்சாமி அரசு அனுபவிக்கலாம். ஆனால், நீட், நெடுவாசல், விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளை கவனிக்கப்படாமல் விடுவது என்பது, அடுத்த முறை ஆட்சி செய்ய நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்பதுதான். இதனை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் அதிமுக அம்மா கட்சியின் பழனிச்சாமி அவர்களே...