ஆளுநருக்கு கருப்புக்கொடி.. நெல்லை காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.. அதிர்ந்த காவல்துறை..!
நெல்லை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் 2 நாள் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தார். தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவரை அம்மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
தூத்துக்குடியில் உள்ள காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் திட்டம் அக்னிபாத். இதனை தவறாக புரிந்துகொண்டு அரசு பொருட்களை சேதப்படுத்து வருகின்றனர் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின், நெல்லை வரவிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் மக்களவை ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியதை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு மதிய உணவு அருந்துவதாக இருந்தது. இதனையறிந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மாடியில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடம் வந்த பாளையங்கோட்டை போலீசார், காங்கிரஸ் கட்சியினரை சமாதானப்படுத்தி கருப்புக் கொடிகளை அங்கிருந்து அகற்றினர். இதையடுத்து காங்கிரஸ் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆளுநர் உணவருந்த செல்லும் அரசு விருந்தினர் மாளிகைக்கு, மிக அருகில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications