போதிய மழை இல்லை- நெல்லை விவசாயிகள் கவலை
நெல்லை: வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் மழை லேசான சாரலுடன் காணாமல் போனதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சீராக பெய்யவில்லை. இதனால் நெல் உள்பட முக்கிய பயிர்கள் குறைந்த அளவிலேயே சாகுபடி செய்யப்பட்டன. தென் மேற்கு பருவமழையும் சரியாக பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழையாவது கை கொடுக்குமா, அல்லது அதுவும் போக்கு காட்டி விடுமா என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் முக்கிய அணைகள் நிரம்பிவிடும். ஆனால் டிசம்பர் மாதம் நெருங்கியும் பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் பிசான பருவ சாகுபடி நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இதை மெய்பிக்கும் வகையில் தமிழக கடலோரத்தை குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் கடந்தபோது லேசான மழை பெய்தது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தை நெருங்குவதால் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. மழை இல்லாத காரணத்தால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்த அளவே உள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் தற்போது 92.90, சேர்வலாறு அணை நீர்மட்டம் 105.97, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 194 அடியாக ஆக உள்ளது. அதே நேரத்தில் அம்பாசமுத்திரத்தில் 11.3 மிமீ மழையும், தென்காசியில் 4.3மி.மீ, சேரன்மகாதேவியில் 11.4மி.மீ, புதூரில் 2 மிமீ மழையும் பெய்து உள்ளது.
மாவட்டத்தில் வேறு எங்கும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு குறைந்த அளவே நீர்வரத்து உள்ளதால் நீர் திறப்பும் குறைந்திருக்கிறது. இதனால் வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் கவலையில் இருக்கின்றனர் விவசாயிகள்.












Click it and Unblock the Notifications