நெல்லையில் அரசுப் பொருட்காட்சி.. ஜூன் 3 ஆவது வாரத்தில் தொடங்குகிறது
நெல்லை: நெல்லையில் ஜூன் 3 ஆவது வாரத்தில் அரசு பொருட்காட்சி தொடங்குகிறது. இது தொடர்ந்து 45 நாட்கள் வரை நடக்கும்.
நெல்லை மாநகராட்சி திடலில் அரசு பொருட்காட்சி ஜூன் 3 ஆவது வாரத்தில் தொடங்கி 45 நாட்கள் நடைபெறுவது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது.
இதில் கலெக்டர் கூறுகையில், "நெல்லையில் அரசு பொருட்காட்சி ஓவ்வொரு ஆண்டும் ஜுன் 3 ஆவது வாரத்தில் தொடங்கி 45 நாட்கள் வரை நடக்கும். இந்த ஆண்டு பொருட்காட்சியில் அனைத்து அரசு துறை சார்பு நிறுவனங்கள், அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்க படங்கள், மாதிரிகள் வைக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள், மகளிர் அழகு சாதன பொருட்கள், பொழுது போக்கு ராட்டினங்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்க வேண்டும். நாள்தோறும் கலையரங்குகளில் ஒவ்வொரு துறை சார்பாகவும் கல்லூரி, பல்கலைகழக மாணவ, மாணவிகளை கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடந்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழக அரசின் சாதனை விளக்க குறும்படங்கள் காண்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு பொருட்காட்சியில் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மேற்கொள்ள வேண்டும்.
தினமும் அரசு பொருட்காட்சி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை காண அனுமதிக்கப்படுவர். மருத்துவ குழுவும் பொருட்காட்சி மைதானத்தில் செயல்பட வேண்டும்" என்று கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள், அலுவலர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications