தீவிரவாதிகள் தாக்கலாம் - மத்திய உளவு பிரிவு எச்சரிக்கையால் கூடங்குளத்தில் கூடுதல் பாதுகாப்பு
நெல்லை: தீவிரவாத தாக்குதல் இருக்கலாம் என்று மத்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்ததால் கூடங்குளம், மகேந்திர கிரியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மீனவர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் பாகிஸ்தான் உளவாளி அருண செல்வராசன் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார். இலங்கையை சேர்ந்த அருண் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை, கல்பாக்கம் அணுமி் நிலையம், விசாகப்பட்டிணம், தூத்துக்குடி துறைமுகம் உள்பட பல்வேறு பகுதிகளை போட்டோ எடுத்து அதனை பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூலம் பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐ உளவு துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் போன் உரையாடல்களை இந்திய உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு இடைமறித்து கேட்டபோது சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடன்குளம் அணு மின் நிலையம், மகேந்திர கிரி விண்வெளி ஆய்வு நிலையம், தூத்துக்குடி துறைமுகம் உள்பட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் வெளியாட்கள் நடமாட்டம் மற்றும் சந்தேகம்படியான படகுகள் குறித்து தகவல் தெரிவிக்க மீனவர்களும், கடலோர பகுதி மக்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடலோர பாதுகாப்பு குழும ஐஜி சொக்கலிங்கம் நெல்லை மாவட்ட கூடங்குளம் அணு மின் நிலையம், மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றை பார்வையிட்டு அங்குள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் பாகிஸ்தான், சீனாவை சேர்ந்த உளவாளிகள் ஊடுருவ வாய்ப்புகள் உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் வந்துள்ளது. எனவே வெளிநாட்டினர், வெளிஆட்கள் சந்தேகம் படும்படியாக நடமாடினால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கடலோர மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசாரும் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications