நெல்லையில் தொடர்ந்து கொட்டும் மழை- மக்கள் மகிழ்ச்சி!
நெல்லை: நெல்லையில் ஒரு வாரத்திற்கு பின்னர் பலத்த இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவ மழை படிப்படியாக உயர்ந்து கொண்டே போய் கடைசியாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குறைந்து போய் விட்டது.
இதனால் பாபநாசம் அணையின் நான்கு கால்வாய்களில் மட்டும் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நெல்லை கால்வாய், பழையக்கால்வாய், கோடகன் கால்வாய் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களில் கார் பருவ நெல் சாகுபடி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 7.30 மணி நிலவரப்படி மழை பெய்து கொண்டிருக்கிறது. நெல்லை சந்திப்பு, சமாதானபுரம், விஎம் சத்திரம், என்ஜிஓ காலனி, தச்சநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த இடி, மின்னல் காணப்பட்டது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 481 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 69.72 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 52.91 அடியாக உள்ளது.
குண்டாறு அணை ஏற்கனவே அதன் முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி விட்டது. அணைக்கு வரும் 1 கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. கருப்பா நதி அணையில் மட்டும் 4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது இரண்டாவது கட்ட சீசன் என வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Nellai filled with monsoon continuously. Kutralam falls filled due to the heavy rain.