ஒன்றரை அடி நீள அரிவாளுடன் கோர்ட்டுக்குள் புகுந்த மகாராஜன்.. மடக்கிப் பிடித்த போலீஸ்
நெல்லை: நெல்லை கோர்ட்டுக்குள் ஒன்றரை அடி நீள அரிவாளை சட்டைக்குள் மறைத்து வைத்து வந்த மகாராஜன் என்ற நபரைப் போலீஸார் மடக்கி் பிடித்துக் கைது செய்தனர்.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி மேலத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மகாராஜன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக நெல்லை கோர்ட்டில் ஆஜாராக வந்தார். அப்போது அவர் சட்டையின் பின்புறத்தை அடிக்கடி தடவி கொண்டே இருந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரது சட்டையை சோதனை போட்டனர். அதில் அவரது சட்டைக்குள் ஒன்றரை அடி நீளமுள்ள அரிவாளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உடனடியாக வெளியே அழைத்து சென்று அருகில் உள்ள தாலுகா போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் மகாராஜன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவர் எதற்காக அரிவாளுடன் கோர்ட்டுக்கு வந்தார். யாரையாவது பழி வாங்கும் நோக்கத்துடன் எடுத்து வந்தரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் கோர்ட்டுக்கு அரிவாளுடன் வந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.