இரவில் வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போதகர்... நெல்லை அருகே பரபரப்பு
நெல்லை: நெல்லை அருகே இரவு நேரத்தில் வீடு புகுந்து மத போதகர் ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுசீந்திரத்தை அடுத்த பல்பனாபன்புதூரைச் சேர்ந்தவர் மரியதாசன். இவரது மனைவி செல்வி. இவர்கள் தற்போது ஈத்தங்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வருகிறார்கள்.
செல்வி அஞ்சுகிராமம் போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பல்பனாபன்புதூரைச் சேர்ந்த தூரத்து உறவினர் ஒருவர் போதகராக உள்ளார். புதன், ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பிளம்பிங் வேலையும் செய்து வந்தார். இந்த நிலையில் ஈத்தங்காடு பகுதிக்கு வந்த அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி என் வீட்டில் தங்கினார். இரவு நேரம் ஆனதால் வீட்டின் வெளிப்பகுதியில் தூங்கினார். சிறிது நேரம் கடந்த பின்பு அவர் திடீரென வீட்டின் உள் பகுதிக்கு வந்து என்னை மானபங்கம் செய்ய முயன்றார்.
நான் கூச்சலிட்ட பின்பும் அவர் என்னை கற்பழிக்க முயன்றார். இதனால் நான் அலறினேன். உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்வி இந்த புகார் மனுவை முதலில் தென்தாமரைகுளம் போலீஸ்நிலையத்தில் அளித்ததாகவும், அங்கிருந்தவர்கள் இது சுசீந்திரம் போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று கூறியதால் சுசீந்திரம் சென்றதாகவும், அங்கிருந்து எல்லை பிரச்சினையை காரணம் காட்டி அஞ்சுகிராமத்துக்கு அனுப்பி வைத்து அலைகழித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து புகார் கொடுக்க வந்த பெண்ணை அலைய விட்டது யார்? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.