போலீஸ், பிரஸ் ஸ்டிக்கருடன் வரும் வாகனங்களை செக் பண்ணுங்க.. எஸ்.பி. உத்தரவு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் போலீஸ், பிரஸ் ஸ்டிக்கர் ஓட்டி வரும் வாகனங்களையும் சோதனை செய்யுமாறு போலீசாருக்கு எஸ்பி நரேந்திரன் நாயர் உத்தரவிட்டிருப்பதால் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சிலர் போலீஸ், பிரஸ் என போலியாக ஸ்டிக்கர் ஓட்டி கொண்டு டூவிலரிலும், காரிலும் வலம் வருவதாகவும், அதில் சில பொருட்களை கடத்தி வருவதாகவும் உளவுத்துறை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை பொறுத்து பணம் மற்றும் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படையினர், போலீசார் ஆகியோர் ரோந்து சுற்றி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். மேலும் நிரந்தர மற்றும் தற்காலிக செக்போஸ்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வரும் வாகனங்கள் சோதனையிடப்பட்டு வருகின்றன.
இதில் போலீஸ் மற்றும் பிரஸ் என போலியாக ஸ்டிக்கர் ஓட்டி வரும் டூவிலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சில பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக உளவு துறை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீஸ் மற்றும் பிரஸ் துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினருக்கு சிலர் நெருங்கமாகவும், விசுவாசமாகவும இருப்பதால் அவர்கள் மூலமாக பணத்தையோ, பொருட்களையோ கொடுத்து அனுப்பினால் சோதனை போட மா்ட்டார்கள் என்ற காரணத்தால் அவர்கள் வாகனத்தையும் சோதனை போடுமாறு எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து அனைத்து செக்போஸ்டுகளிலும் போலீஸ், பிரஸ் என ஸ்டிக்கர் ஓட்டி வரும் வாகனங்களை நிறுத்தி நியாயமான முறையிலும், கண்ணியமான முறையிலும் சோதனையிட வேண்டும். அதில் அவர்கள் போலியாக இருந்தால் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அனுமதி பெற்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இதனால் போலிகள் கிலியில் உள்ளனர்.