நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சியில் தனி அதிகாரிகள் பொறுப்பேற்பு
நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளுக்கு தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.
நெல்லை: நெல்லை, தூத்துக்குடியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததால் தனி அதிகாரிகள் உடனடியாக நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியானதை முன்னிட்டு அவர்கள் இன்று முதல் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் 2011ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவி காலம் நேற்றுடன் முடிந்தது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 36 டவுண் பஞ்சாயத்துகள், ஒரு மாவட்ட பஞ்சாயத்து, 19 ஊராட்சி ஓன்றியங்கள், 425 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் மொத்தம் 5175 உளளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, 2 நகராட்சிகள், 19 டவுன் பஞ்சாயத்துகள், 1 மாவட்ட பஞ்சாய்தது, 12 ஊராட்சி ஓன்றியங்கள், 403 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 3945 உளளாட்சி பதவிகள் உள்ளன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 927 உள்ளாட்சிகள் உள்ளன. இதில் 9020 உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சிக்கு கமிஷனர் சுப்பிரமணியன், தூத்துக்குடி மாநகராட்சிக்கு கமிஷனர் ராஜாமணி, விகேபுரம், அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், காயல்பட்டிணம், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகளுக்கு அந்தந்த நகராட்சி ஆணையர்கள் தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் பழனியும், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக்கு இதே துறையை சேர்ந்த பிச்சை ஆகியோர் தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று அந்தந்த துறைக்கு உதவி இயக்குனர்கள் தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று தனி அதிகாரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.