மார்கழி குளிர்.. நடுங்கும் நெல்லை.. காய்ச்சல், ஆஸ்துமாவால் மக்கள் அவதி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், சளி, காய்ச்சல், ஆஸ்துமா தொல்லையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி, மருத்துவமனையில் அலை மோதி வருகின்றனர்.
கடும் குளிரால் குழந்தைகள், வயதானவர்கள்தான் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
குளிர்காலத்தில் நெல்லை மாவட்டத்தில் கடும் குளிருடன், பனிப்பொழிவும் வாட்டி வதைப்பது வழக்கம். இந்த முறை அது சற்று அதிகமாகவே இருக்கிறதாம்.

கட்டுக்குள் இருக்கும் டெங்கு
நெல்லை மாவட்டத்தில் தட்பவெட்ப நிலை அடிக்கடி மாறி வருகிறது. மாவட்டத்தையே ஆட்டி படைத்த டெங்கு ஒரளவு கட்டுக்குள் இருக்கின்றது.

கொசுத் தொல்லையும் பரவாயி்ல்லை
தற்போது ஒரளவு மழை கட்டுக்குள் இருப்பதால் கொசுக்கள் தொல்லை கட்டுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் 5 பேராவது டெங்கு அறிகுறிகளோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.

மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம்
இதே அளவு தனியார் மருத்துவ்மனைகளிலும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்வதாக கூறப்படுகிறது.

மார்கழிக் குளிர் வாட்டி வதைக்கிறது
இந்த நிலையில் மார்கழி மாதம் தொடங்கியுள்ளதால் வழக்கத்திற்கு மாறாக கடும் பொழிவு ஆரம்பித்துள்ளது. அதிகாலை முதல் 7 மணி வரையும், மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரையும் கடும் குளிர் நிலவுகிறது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆஸ்துமா நோயாளிகள் கடும் பாதிப்பு
குறிப்பாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஷக் காய்ச்சலும் பரவுகிறது
பனியின் தாக்கம் காரணமாக விஷக்காய்ச்சலும் பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சங்கரன்கோவில், கடையநல்லூர் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட மருத்துவமனையில் புற நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நோயாளிகள் கூட்டம் அலை மோதி வருகிறது.

வெளியே வராதீங்க.. டாக்டர்கள் அட்வைஸ்
டாக்டர்கள் இதுகுறித்து கூறுகையில் பனி பிடிக்காதவர்கள், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் வெளியே வரும் நேரங்களில் பனியை தாங்கும் சட்டைகளை அணிய வேண்டும். கூடிய வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

சுட வைத்த தண்ணீரைக் குடியுங்கள்
குளிர்ந்த நீரை பருக கூடாது. சூடான காய்ச்சிய நீரையே பருக வேண்டும். இது சீசன் காய்ச்சல் என்பதால் பயப்பட தேவையில்லை.

உடனே டாக்டரிடம் போய் விடுங்கள்
காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

பனியால் விழுந்த அடி
இந்த பனி காரணமாக நெல்லை மாவட்டத்தில் மக்களின் இயல்வு வாழ்க்கையில் பலத்த அடி விழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications