வெற்றியை வெறியோடு கொண்டாடியதும், தோல்வியை கண்டு மூலையில் முடங்கியதும் இல்லை: ஸ்டாலின்
சென்னை: வெற்றியை வெறியோடு கொண்டாடியதும் இல்லை, தோல்வியை கண்டு மூலையில் முடங்கியதும் இல்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தி. நகர் பகுதி திமுக செயலாளர் ஏழுமலையின் மகன் கார்த்திக் என்ற சஞ்சீவ் குமாருக்கும், காயத்ரிக்கும் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று திருமணம் நடைபெற்றது.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்து மணக்களை ஆசிர்வதித்தார். அதன் பிறகு அவர் பேசுகையில்,
ஏழுமலை
ஏழுமலை அனைவரிடமும் அன்பு காட்டுவார். மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளார். நான் சென்னை மாநகர மேயராக இருக்கையில் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க எனக்கு துணையாக இருந்தவர்.
திருமணம்
தற்போது சுயமரியாதை சீர்திருத்த திருமணம் நடந்துள்ளது. இந்த வகை திருமணத்தை கொண்டு வர தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை அடுத்து கருணாநிதி பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அரசியல்வாதிகள்
சீர்திருத்த திருமணங்கள் தற்போது அதிக அளவில் நடைபெறுகிறது. திருமணங்களை நடத்தி வைக்குமாறு புரோகிதர்களை அழைப்பதை விட என் போன்று அரசியல்வாதிகளை தான் அதிகம் அழைக்கிறார்கள்.
தோல்வி
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது பற்றி பலரும் பேசினார்கள். திமுக மக்களுக்காக பாடுபடும் இயக்கம் ஆகும். வெற்றியை வெறியுடன் கொண்டாடியதும் இல்லை, தோல்வியை கண்டு மூலையில் முடங்கியதும் இல்லை.
ராமகோபாலன்
தமிழகம் எந்த நிலையில் உள்ளது என்பது ராமகோபாலனின் அறிக்கை மூலம் தெரிகிறது. தமிழகத்தில் சட்டம் இருக்கிறது ஆனால் ஒழுங்காக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பரிகாரம் காணும் நாள் விரைவில் வரும். அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வோம் என்றார் ஸ்டாலின்.