Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம்.. அப்போலோவில் ஜெ.வை பார்க்கவே இல்லையா முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜரானார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று ஆஜராகி விளக்கமளித்தார்.

Never met Jayalalitha at Apollo: George

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக தற்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்கள் சந்தேகம் எழுப்பியதனால் தமிழக அரசு ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் பணியில் இருந்தார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நடந்த சிகிச்சைகள், அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் புதன்கிழமை ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை ஏற்றுக்கொண்ட ஜார்ஜ் நேற்று மதியம் 2.10 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜரானார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 4.30 வரை நடந்தது. விசாரணையின் போது, வழக்கறிஞர்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஜார்ஜ்ஜை குறுக்கு விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை முடிந்த பின்னர் ஆணையத்தில் இருந்து வெளியே வந்த ஜார்ஜ்ஜிடம் செய்தியாளர்கள் விசாரணை பற்றி கேள்விகள் கேட்டனர். ஆனால் அவர் எதற்கும் பதிலளிக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

ஆனாலும், ஜார்ஜ்ஜிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ்ஜுக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்கும் என்ற அடிப்படையில் அழைத்திருந்தோம். அதன்படி அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

விசாரணையின் போது ஜார்ஜ் கூறியதாவது:

சசிகலா போயஸ் கார்டனில் இருந்து 2011 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட போது, சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தேன். அப்போது ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று தெரிந்துகொண்டேன். அதேபோல, கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்த தகவலை அப்போது முதலமைச்சரிடம் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால், நான் மாநகர காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டேன் என்று தெரிந்துகொண்டேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நாட்களில் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருவேன். ஆனால், நான் ஜெயலலிதாவை ஒரு நாளும் நேரில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாக வி.ஐ.பி.க்கள் பார்த்ததாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா உடல்நிலை மோசமானதை காவல்துறை வட்டாரங்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். ஆனாலும், அங்கே அப்பல்லோ மருத்துவர்களிடம் நேரடியாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை.

மேலும், தீபா, ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்று அப்போது எனக்கு தெரியாது. அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபோது, அவரை அழைத்து சென்றேன் என்று ஜார்ஜ் தனது வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது வழக்கறிஞர்கள், ஜார்ஜ்ஜிடம் நீங்கள் சசிகலாவை சந்தித்து பேசினீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது, சசிகலாவை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதனால், நான் ஏன் அவரைச் சந்திக்க வேண்டும் என்று ஜார்ஜ் பதிலளித்தாராம்.

இந்நிலையில், ஜார்ஜ்ஜிடம் மேலும், விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவர் மீண்டும் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை ஆணையம் முன்பு ஆஜாராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போல, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரிடம் இதற்கு முன்பு நடத்திய விசாரணையின் போது, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கு டாக்டராக பணியாற்றி வரும் திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி (பொதுமருத்துவம்), ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ குறிப்புகளை எடுத்திருந்தார் என்று கூறினார்.

டாக்டர் சிவக்குமாரின் வாக்குமூலத்தின்படி, டாக்டர் ராஜமாதங்கி, திவாகரனின் மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்துவதற்காக வரும் 16 ஆம் தேதி ஆஜராக ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+