லோக்சபா தேர்தலுக்குத் தயாராகிறார் வைகோ.. காங்-பாஜக அல்லாத கூட்டணியை நாளை அறிவிக்கிறார்!
லோக்சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத புது கூட்டணியை உருவாக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
Recommended Video

திருச்சி: 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார் வைகோ. இதனை தஞ்சையில் நாளை நடைபெற உள்ள மாநாட்டில் அறிவிக்கப் போகிறார் வைகோ.
இந்தியாவில் காங்கிரஸ், பாஜக இல்லாத கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டுமென வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி என்னிடம் கூறினார். அதுதான் என்னுடைய எண்ணமும் கூட என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தஞ்சையில் நடைபெற உள்ள மாநாட்டின் போது எதிா்கால கூட்டணி மற்றும் பல்வேறு முக்கிய கருத்துகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது ஆளுக்கு முதலாய் பாஜக உடன் கூட்டணி அமைத்து மோடி பிரதமராக பாடுபட்டார் வைகோ. கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது, அதிமுக, திமுக அல்லாத புதிய மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்தித்தார்.

2019 லோக்சபா தேர்தல்
இன்னும் இரண்டு ஆண்டுகளில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை இப்போதே அரசியல் கட்சியினர் தொடங்கி விட்டனர். வைகோவும் தனது நிலைப்பாட்டை தஞ்சை மாநாட்டில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.

திருச்சியில் பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 1995-ல் திருச்சியில் நடைபெற்ற முதல் ம.தி.மு.க. மாநில மாநாடு மிகப்பெரிய மாநாடாகவும், பிரமாண்டமாகவும் அமைந்தது. அதிகாலை 3.30 மணிக்கு பேசத் தொடங்கிய நான் எனது உரையை 5.30 மணிக்குத் தான் முடித்தேன்.

தஞ்சை மாநாடு
அந்த மாநாட்டையும் மிஞ்சும் அளவிற்கு தஞ்சை மாநாடு அமையும், இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் பல நிறைவேற்றப்படும். எதிர்கால அரசியல் கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும்.

ராம்ஜெத்மலானி அறிவிப்பு
ஈழத்தமிழர்கள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய காரணமாக இருந்த வக்கீல் ராம்ஜெத்மலானியை நேற்று அவரது பிறந்த நாளையொட்டி சந்தித்து பேசினேன். அப்போது அவர் மதச்சார்பின்மையும், கூட்டாட்சி தத்துவமும் காக்கப் பட வேண்டுமானால் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.

மோடி பிரதமராக பிரச்சாரம்
அதுதான் எனது ஆசையும்கூட. அதற்கு பக்கப்பலமாகவும் இருப்பேன் என்று கூறினேன். கடந்த லோக்சபா தேர்தலின் போது மோடி பிரதமராக வேண்டும் முதன் முதலாக கூறியவர் ராம்ஜெத்மலானி. இதேபோல மோடி பிரதமராக வேண்டும் தமிழகம் முழுவதும் முழு மூச்சாக பிரச்சாரம் செய்தார் வைகோ.

தஞ்சையில் அறிவிப்பு
தஞ்சாவூர் மதிமுக மாநாட்டில் லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்று அறிவிக்க உள்ளார் வைகோ. இந்த கூட்டணியை எந்த அளவிற்கு வெற்றிகரமாக கொண்டு செல்வார், அந்த கூட்டணியில் யார் யார் இணைவார்கள் என்று வைகோவிற்கு மட்டுமே தெரியும்.












Click it and Unblock the Notifications