லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!
சென்னை: இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாகத்தான் தொடங்கியிருப்பதாகவும், எல் நினோ எனப்படும் வானிலை மாற்றம் காரணமாக மழையின் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி வாக்கில் கேரளக் கடற்கரையைத் தொடும். ஆனால், இந்த ஆண்டு சற்றுத் தாமதமாக ஜூன் 4 அன்று பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

பருவமழை எப்படி அறிந்துக்கொள்ளப்படுகிறது?
கேரளா, லட்சத்தீவு மற்றும் மங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள 14 வானிலை மையங்களில் 60%-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு 2.5 மி.மீ அல்லது அதற்கு மேல் மழை பதிவானால் மட்டுமே பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அந்த அளவுகோலின்படி தற்போது பருவமழை தொடங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மழை லேட்டாக தொடங்கியிருந்தாலும், போதுமான அளவுக்கு பெய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
ஏன் பருவமழை முக்கியம்?
இந்தியாவை பொறுத்தவரை, விவசாயிகளுக்கு தென்மேற்கு பருவமழை ரொம்பவும் முக்கியம். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பரப்பளவில் 50%-க்கும் அதிகமான விவசாய நிலங்கள் இன்னமும் மழைநீரை மட்டுமே நம்பிப் பயிர் செய்யப்படுகின்றன. இந்த நிலங்களில் பயிரிடப்படும் குறுவைக்காலப் பயிர்களான நெல், கரும்பு, பருத்தி, சோளம் மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி முழுமையாக பருவ மழையைச் சார்ந்தே உள்ளது.
சிக்கல் இதுதான்
நல்ல மழை பெய்தால் உணவுப் பொருட்கள் தடையின்றிக் கிடைத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். மழை பற்றாக்குறையானால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து, நாட்டின் வட்டி விகிதங்களைக் குறைப்பதில் ரிசர்வ் வங்கிக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதேபோல, நாட்டின் முக்கியக் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் நீர்மின் நிலையங்களுக்குத் தேவையான தண்ணீரை இந்த 4 மாதப் பருவமழைதான் வழங்குகிறது. எனவேதான் தென்மேற்கு பருவமழை ரொம்பவும் முக்கியம்.
விவசாயிகளுக்கு வார்னிங்
இருப்பினும் இந்த ஆண்டு பருவமழை இயல்பான அளவில்தான் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சில இடங்களில் பற்றாக்குறையுடனும் இருக்கும் என்பதால், விவசாயிகள் அதற்கேற்ப தயாராக வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்ப மாறுபாடான 'எல் நினோ' நிலவும் ஆண்டுகளில் பொதுவாக இந்தியாவில் பருவமழை பொய்த்து வறட்சி ஏற்படுவது வழக்கம். ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய கணிப்புப்படி, எல் நினோவின் தாக்கம் தற்போது உலகளவில் படிப்படியாகக் குறைந்து, பலவீனமடைந்து வருகிறது.
எனவே, ஜூன் - செப்டம்பர் வரை நாடு முழுவதும் சாதாரண அல்லது இயல்பான அளவிலேயே மழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications