மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!
சென்னை: மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி குறுக்கே மேகதாது, ராசிமாணலில் அணைக் கட்ட திட்டவரைவு தயாரிக்க கர்நாடகா தனது பட்ஜெட்டில், ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது.

கர்நாடக அரசின் நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. காவேரி நீரை நம்பி தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு கிடைக்கும் உபரிநீர் தடைபடும் என கூறப்படுகிறது.
எனவே தமிழக விவசாய அமைப்புகளும் எதிர்கட்சிகளும் தமிழகத்தில் நாளை நபந்த்துக்கு அழைப்புவிடுத்துள்ளன. இந்நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புது மனு தாக்கல் செய்து, கர்நாடக நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரியுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிப்பது இல்லை. காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தருவது இல்லை. கர்நாடக அணைகள் நிரம்பியதும் உபரி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது. அந்த உபரி நீரையும் தடுக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகள் கட்டுவதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் குடிநீருக்கு காவிரி தண்ணீரை நம்பி இருக்கும் நிலை உள்ளது. விவசாயத்துக்கு காவிரி தண்ணீரை நம்பி இருக்கும் பகுதிகளில், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து உள்ளது. டெல்டா பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் கடுமையான பாதிப்பு அடையும் நிலை உள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதற்கான வரைவு திட்டத்துக்கு திடீரென்று 25 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பது மிகுந்த அச்சத்தை அளிக்கிறது.
காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டிலும், காவிரி நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் நிலுவையில் உள்ள போது, கர்நாடக அரசு இதுபோன்ற அத்துமீறலான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
எனவே காவிரி நதிநீர் பங்கீடு குறித்த காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வகையிலும், தமிழகத்தில் வறட்சி ஏற்படும் நிலையை தடுக்கும் வகையிலும், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications