வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்.. கன மழை வரும்... வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வருவதால் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த மாத முடிவு வரை பருவ மழைக்காலம் உள்ளது. ஆரம்பத்தி்ல் மாநிலம் முழுதும் மழை வெளுத்துக்கட்டியது. இருப்பினும் பின்னர் மழை கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆரம்பித்தது.வடக்கிலும், தெற்கிலும் மாறி மாறிப் பெய்து வந்தது.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை இல்லை. தென் மாவட்டங்களிலும் மழை பெரிதாக இல்லை.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,
இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் கடலோர மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் வழக்கமான வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொருத்தமட்டில் வானம் பிரகாசமாக காணப்படும். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. ஆகையால் 3 நாட்கள் திட்டமிட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறுவது குறித்து அதன் இயக்கத்தை வைத்துதான் சொல்ல முடியும்.
நேற்று வரையிலான நிலவரப்படி இந்த பருவ காலத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 42 செ.மீ. அளவுக்கு தமிழகத்தில் பெய்துள்ளது. இது வழக்கமாக பதிவாகும் மழையை விடவும் 2 சதவீதம் குறைவு. வரும் நாட்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.