"யுத்தத்தை" தடுக்க அதிமுகவில் புதிதாக 20 மாவட்டங்கள் உருவாக்க ஓ.பிஎஸ் - ஈ.பி.எஸ் முடிவு!
கோஷ்டி பூசலைத் தீர்க்க அதிமுகவில் புதிதாக 20 மாவட்டங்கள் உருவாக்க ஓ.பிஎஸ் - ஈ.பி.எஸ் இருவரும் முடிவு செய்துள்ளனர்.
சென்னை : அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் பிரச்னைகளை தீர்க்க, கூடுதலாக 20 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வோர் அரசியல் கட்சியிலும் நிர்வாக ரீதியாக தங்கள் வசதிக்கு ஏற்ப மாவட்டங்களைப் பிரித்து அதற்கேற்ப நிர்வாகிகளை நியமித்து இருப்பார்கள். அதுபோல அதிமுகவில் 50 மாவட்டங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க. ஜெயலலிதா தலைமையில் இயங்கிய போது 50 மாவட்ட செயலாளர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வைத்தார். ஆனால், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகங்களிலும் பிளவு ஏற்பட்டது. இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
புதிய நிர்வாகிகள் நியமிப்பு
அதே சமயம், டி.டி.வி தினகரனுக்கும் ஒரு சில மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும்ஆதரவு அளித்து வந்தனர். இதனால், தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கடந்த ஒரு சில வாரங்களில் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது.
பன்னீர் செல்வம் அணியினருக்கு பதவி
இதனால் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய சூழலில், வருகிற 2ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் கூட உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியும் இணைந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு இன்னமும் உரிய பதவிகள் கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் ஓ.பி.எஸ். அணியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், பன்னீர் செல்வம் அணியினருக்கு பதவிகள் வழங்க ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரும் முடிவு செய்துள்ளனர்.
புதிய பதவிகள் உருவாக்கம்
அதன்படி, தற்போது 50 என்கிற எண்ணிக்கையில் இருக்கும் மாவட்டங்களை 70 ஆக பிரிக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் 20 மூத்த தலைவர்கள் மாவட்டச் செயலாளர்களாக்க முடியும். இதனால் கட்சியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் குறையும் என்று இருவரும் திட்டமிட்டு உள்ளனர். அதே போல, இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி என மொத்தம் இருக்கும் 14 அணிகளிலும் கூடுதலாக 10000 பேருக்கு பொறுப்புகள் வழங்க முடியும்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி
இந்த நடவடிக்கையின் மூலம், அதிமுகவில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்குரல்களை சமாளிக்கவும், டி.டி.வி தினகரன் ஆட்களை ஓரம்கட்டவும் முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரம் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், இவர்கள் அனைவரும் கட்சிப்பணிகளை சரியாக செய்வதன் மூலம் தேர்தலில் வெற்றியும் கிடைக்கும் என்று அதிமுக தலைமை திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.