திருச்சி மாநாட்டிற்கு தலைமை? ஆரம்பமே ‘முட்டுக்கட்டை’.. இப்படி ஒரு சிக்கலா? ஓபிஎஸ் டீம் பிளான் என்ன?
சென்னை : திருச்சியில் வரும் 24ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கும் மாநாட்டில் சசிகலாவும் பங்கேற்பார் எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சசிகலா தலைமையில் மாநாடு நடைபெற வேண்டும் என அவரது தரப்பினர் விரும்பும் நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் அதனை ஏற்காததால் ஓபிஎஸ் - சசிகலா ஒரே மேடையில் தோன்றும் முயற்சி பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். தேர்தல் ஆணையத்தில் இருந்து அங்கீகாரம் பெறுவதை நோக்கி காய்நகர்த்தி வருகிறார். இதற்கிடையே மீண்டும் நீதிமன்ற கதவுகளை தட்டிக் காத்திருக்கிறார் ஓபிஎஸ். மக்களிடம் சென்று நியாயம் கேட்போம் என்று கூறிவந்த ஓபிஎஸ் திருச்சியில் வரும் 24ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா பிறந்த நாள், அதிமுகவின் 51வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம், திருச்சியில் மிகப்பெரிய அளவில் கூட்டத்தை திரட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று தனது அணியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் சசிகலாவையும் மேடையேற வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.
ஓபிஎஸ் மாநாடு பிளான் : ஓ.பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி கேசி பழனிசாமி, அன்வர் ராஜா, சசிகலா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வமே தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், சசிகலா நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.
அதேசமயம், சசிகலா ஆதரவாளர்கள், சசிகலாவை ஓபிஎஸ் தரப்பினர் முதன்மைப்படுத்தினால் மட்டுமே அவர் கலந்துகொள்வார் என்கிறார்கள். அதாவது, சசிகலா தலைமையில் இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்பது சசிகலா தரப்பினரின் விருப்பம். ஆனால், இதனை ஓபிஎஸ் தரப்பினர் ஏற்கத் தயாராக இல்லை என்பதும் தெரிகிறது.

சசிகலா தலைமை இல்லை : ஓபிஎஸ் ஆதரவாளரான சுப்புரத்தினம் இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில், "திருச்சி மாநாட்டை நடத்துவது நாங்கள். இந்த மாநாட்டில் தலைமை தாங்குவது நாங்கள் தான். சசிகலா சிறப்பு அழைப்பாளராகத்தான் பங்கேற்பார்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "ஓபிஎஸ் ஏன் மாநாடு நடத்தவில்லை, பொதுக்கூட்டம் நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பி வந்தார்கள். பன்னீர்செல்வத்தின் அடிப்படை நோக்கமே அதிமுக சிதறுண்டு போகக்கூடாது, கட்சியை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதுதான். எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் ஏற்பட்ட பிறகு தான் ஓபிஎஸ் சசிகலாவை துணைக்கு அழைப்பதாக பலரும் சொல்கிறார்கள்.
ஆனால், 2019ல் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற போதே அதிமுக ஓட்டுகள் சிதறக்கூடாது என்பதற்காக சசிகலா, டிடிவி தினகரனை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமித் ஷாவுடன் சந்திப்பு நடைபெற்றபோதே வலியுறுத்தினார் ஓபிஎஸ். சசிகலாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், கட்சி நலனுக்காக அன்றே அந்த முடிவைச் சொன்னார் ஓபிஎஸ்.
கட்சியை ஒன்றிணைக்க : தற்போது அதிமுகவை பலவீனப்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதால், கட்சியை இப்போதாவது ஒன்றிணைக்க வேண்டும் என நினைக்கிறார் ஓபிஎஸ். கட்சித் தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மாநாட்டை நடத்தவுள்ளார் ஓபிஎஸ். திருச்சியில் வரும் 24ஆம் தேதி புரட்சி மாநாடு என்ற பெயரில் நடத்தப்படுவதாக நான் அறிகிறேன்.

திமுக தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க அறிஞர் அண்ணா திருச்சியில் திருப்புமுனை மாநாட்டை நடத்தினார். அதில் வாக்கெடுப்பு நடத்தி தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்து 1957ல் தேர்தலைச் சந்தித்து 15 இடங்களைப் பிடித்தது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது திமுக. தமிழ்நாட்டு அரசியலில் உண்மையிலேயே திருப்புமுனையாக அமைந்தது அந்த மாநாடு.
திருப்புமுனை : அதேபோல, ஓபிஎஸ்ஸால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திருச்சி மாநாடு தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. அதிமுக எங்கள் கட்சி. தனிக்கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தான் திருச்சி மாநாட்டை நடத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம்." எனத் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் சுப்புரத்தினம்.












Click it and Unblock the Notifications