நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த அதிமுக அரசு – மக்களின் மனம்கவர கொட்டப்போகும் திட்டங்கள்
சென்னை: தமிழகத்தில் ஆட்சிக் காலத்தை 4 ஆண்டு நிறைவு செய்துள்ள அதிமுக அரசு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் மக்களை கவர புதிய திட்டங்களை அறிவிக்க தீயாக செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று புதிய திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வருகின்றது.
கடந்த, 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது.

அள்ளிக் தெளித்த திட்டங்கள்:
ஜெயலலிதா, நான்காவது முறை முதல்வரானார். ஆட்சி பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதிப்படி, இலவச கால்நடை வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ஆகியவற்றை அறிவித்தார்.

37 இடங்களில் வெற்றி:
இத்திட்டங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளை அதிமுக. கைப்பற்ற இதுவும் ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கு:
இந்த நிலையில்தான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் முதல்வரான பன்னீர்செல்வம் செயல் படாத நிலையில் இருந்துவந்தார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

மீண்டும் முதல்வரானார்:
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கடந்த 11-ந் தேதி ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் 23-ந் தேதி மீண்டும் தமிழக முதல்வரானார்.

கொண்டாட்டத்தில் அதிமுகவினர்:
இது அ.தி.மு.க தொண்டர்களிடம் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து கடந்த 16 ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஐந்தாவது முறை இது:
இதையும் ஜெயலலிதா ஐந்தாவது முறை முதல்வராக பொறுப்பேற்றதையும், வெகுவிமரிசையாக கொண்டாட அ.தி.மு.கவினர் முடிவு செய்துள்ளனர்.

மக்களைக் கவர முடிவு:
அதேநேரம் கடந்த சில மாதங்களாக அரசு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை நீக்கும் வகையிலும் மக்களை கவரும் வகையிலும், புதிய திட்டங்களை அடுத்தடுத்து வெளியிட முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

மெட்ரோ ரயில் ஓட்டம் துவக்கம்:
இன்று தலைமைச் செயலகம் வரும் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதிய திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார்.அடுத்த சில தினங்களில், சென்னை மெட்ரோ ரயில் ஓட்டத்தை துவக்கி வைக்கிறார். புதிய பேருந்துகளை, இயக்கி வைக்க உள்ளார்.

அம்மா சேலையும் வருது:
அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட், அம்மா உப்பு ஆகியவற்றை தொடர்ந்து அம்மா சேலை அறிமுகம், அம்மா குடிநீர் திட்டத்தை விரிவுப்படுத்துவது, பண்ணை பசுமை காய்கறி கடைகளை அதிகரிப்பது, ரேஷன் கடையில் ரவை, மைதா வழங்குவது ஆகிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அம்மா அமுதம் அங்காடி விரைவில்:
மேலும், மளிகை பொருட்களை குறைந்த விலையில் வழங்க "அம்மா அமுதம் அங்காடி" திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications