புத்தாண்டு தினக் கொண்டாட்டம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் 57 ஆம்புலன்ஸ் வாகனங்கள்
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள், விபத்துகள் ஏற்பட்டால் கையாள்வதற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்ட உள்ளன.
புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களில், தமிழகத்தில் சென்னை முதலிடத்திலும், கோவை, திருச்சி ஆகிய இடங்கள் அதற்கடுத்தும் உள்ளன. டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 1 வரை அசம்பாவிதங்கள், விபத்துகள் நேர்ந்தால் அவற்றைக் கையாள்வதற்கு சென்னையின் முக்கிய இடங்களில் அவசர ஊர்திகள் நிறுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் அதிகாரிகள் கூறியது: ஆங்கில புத்தாண்டு தினத்தன்று சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் கூடுவர். அதற்காக செயல்பாட்டில் உள்ள 41 வாகனங்களும்,16 புதிய வாகனங்களும் கடற்கரை சாலை, வாலாஜா சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள், சந்திப்புகளில் நிறுத்தப்பட்டிருக்கும். 108 சேவையின் கட்டுப்பாட்டு அறையில் அனைத்து ஊழியர்களும் பணியில் இருப்பர்.
வாக்கி-டாக்கியிலும் தகவல்: டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 12.30 மணி வரை ஒரே சமயத்தில் செல்லிடப்பேசிகளில் வாழ்த்துகள் பகிரப்படுவதால், அந்த சமயத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் ஸ்தம்பிக்கும். அந்த நேரத்தில் விபத்துகள், அசம்பாவிதங்கள் நடைபெற்றால், செல்பேசியில் தகவல் அளிக்க இயலாது. ஆகவே, காவல் துறையினரின் வாக்கி-டாக்கியின் மூலம் 108 சேவை மையத்துக்கு தகவல் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொடர்பை எளிதாக்கும் வகையில், '108' சேவை கட்டுப்பாட்டு அறையில், போலீஸ் அதிகாரிகளும் இருப்பர் என்றனர்.












Click it and Unblock the Notifications