ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு ஜெ. பதவியிழப்பு எச்சரிக்கை மணி: ஜி.ரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வலிமை மிக்க போராட்டங்களின் மூலம் மதவெறி, சாதிவெறி சக்திகளை பின்னுக்குத்தள்ளி முற்போக்கான திசையில் காலத்தின் கைகளை பிடித்துக்கொண்டு நடைபோடுவோம். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 2014-ஆம் ஆண்டு விடைபெற்று 2015-ஆம் ஆண்டு மலரும் இந்தத் தருணத்தில் கடந்த கால வாழ்வின் துயரங்கள் தொலைந்து புதிய வெளிச்சம் பரவும் என்ற நம்பிக்கையை தெரிவித்துக்கொள்கிறோம்.

New year wishes from G.Ramakrishnan

முதலாளித்துவ மூலதனம் எனும் சூறாவளியில் சிக்கி உலக மக்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது. இதன் எதிர்விளைவாக பல நாடுகளில் பயங்கரவாதம் தலைதூக்குகிறது. ஆனால் இத்தகைய போக்கு கண்டு நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை. முதலாளித்துவ சுரண்டல் முறைக்கு எதிராக உலகளாவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களும் வீறுகொண்டு எழுந்துள்ளன. உலக மக்களின் துன்ப துயரங்களுக்கு முதலாளித்துவம் எனும் நோயால் தீர்வுகாண முடியாது. மார்க்சியம் எனும் மாமருந்தே இந்தப் பிணிக்கு தீர்வாக அமையமுடியும் என்பதை எதிர்வரும் காலம் நிரூபிக்கும் என நம்பிக்கையோடு முன்னேறுவோம்

கடந்தாண்டில் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோற்கடிக்கப்பட்டது. அந்த அரசு மக்கள் மீது தொடுத்த தாக்குதலால் எழுந்த அதிருப்தியை அறுவடை செய்து வலதுசாரி பிற்போக்கு பின்புலம் கொண்ட பாஜக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் நலனுக்கும் நாட்டு நலனுக்கும் தீங்கு பயக்கும் தாராளமய, தனியார்மய பொருளாதாரக் கொள்கையை வெகுவேகமாக அமல்படுத்தி வருகிறது நரேந்திரமோடி அரசு.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் அவசரச்சட்டம் எனும் ஆபத்தான வழியில் பயணம் செய்கிறது மத்திய பாஜக அரசு. காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிக்கவும், நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் பெருமுதலாளிகளுக்கு பந்திவைக்கவும், நிலம் கையப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்து நிலக் கொள்ளைக்கு வழிவகுக்கவும் அடுத்தடுத்து அவசரச்சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. பெருமுதலாளிகளால் பதவி அமர்த்தப்பட்ட மோடி அரசு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு கோடானுகோடி இந்திய மக்களை வஞ்சித்துவருகிறது.

மறுபுறத்தில் விடுதலைப்போராட்டத்தின் விழுமியமான மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் போன்றவை ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரத்தால் சீர்குலைக்கப்படுகின்றன. கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். சமஸ்கிருத திணிப்பு கல்வி நிலையங்களில் நடைபெறுகிறது. காந்தி, நேரு போன்றவர்களின் புகழை பின்னுக்குத்தள்ளி கொடியவன் கோட்சேவுக்கு கோவில் கட்டும் அளவிற்கு துணிந்துவிட்டது இந்தக்கூட்டம். பகுத்தறிவு பாரம்பரியம் கொண்ட தமிழகத்திலும் கூட மதவெறி சக்திகள் காலூன்ற முயல்கின்றன. இந்த சக்திகளை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியிழந்தது 2014-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. நாடு முழுவதும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு மக்கள் சொத்தை சூறையாடும் அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இதுஒரு எச்சரிக்கை மணியாகும். கிரானைட், தாதுமணல் கொள்ளை தமிழகத்தை உலுக்கிவருகிறது. அது குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும் பல முட்டுக்கட்டைகள்போடப்படுகின்றன.

மீத்தேன் எரிவாயு எடுக்கும்திட்டம் காவிரி பாசன பகுதிக்கு பெரும் ஆபத்தாக நீடிக்கிறது. விவசாயிகள் பலவகைகளிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள். விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்கும் 100 நாள் வேலைத்திட்டத்தை முடமாக்கி முடக்க சதி நடக்கிறது.

நோக்கியா, பாக்ஸ்கான் என பன்னாட்டு நிறுவனங்கள் பளபளப்பாக வந்தாலும் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதே தொடர்கதையாக உள்ளது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடிவருகின்றனர். தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் தமிழக அரசு அலட்சியம்காட்டுவதால்தான் அரசுப்போக்குவரத்து ஊழியர்கள் போராடி வருகின்றனர். தமிழக மக்களின் நலனுக்காக அனைத்துப் பகுதி மக்களையும் இணைத்து பெரும் போராட்டங்களை நடத்தவேண்டியிருக்கும் என்ற செய்தியுடன் தான் புத்தாண்டு பிறக்கிறது.

சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களும், சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் அநீதிகளும், சாதிமறுப்பு காதல் திருமணங்களை காவு கேட்கும் கௌரவக்கொலைகளும், சமூக நீதிக்காகவும், சமநீதிக்காகவும் இன்னும் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தவேண்டியுள்ளது என்பதையே உணர்த்தி நிற்கிறது.

இதுவரை மனிதகுலத்தை நடத்திவந்துள்ளது இடையறாத போராட்டமே ஆகும். வலிமை மிக்க போராட்டங்களின் மூலம் மதவெறி, சாதிவெறி சக்திகளை பின்னுக்குத்தள்ளி முற்போக்கான திசையில் காலத்தின் கைகளை பிடித்துக்கொண்டு நடைபோடுவோம். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+