சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டே நாளான குழந்தை திருட்டு.. சிசிடிவில் பதிவான பரபர காட்சி
சேலம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தையை பெண்மணி ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்பான சிசிடிவி காமிரா காட்சிகள் வெளியாகியுள்ளன.
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து குழந்தையை பெண் ஒருவர் கடத்தி செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இந்து என்ற 23 வயது, பெண்ணுக்கு இரு நாட்களுக்கு முன்பு, அழகான ஆண் குழந்தை குழந்தை பிறந்துள்ளது. நேற்று அவரது தாயார் சுடு தண்ணீர் பிடித்து வர வெளியே போயுள்ளார். குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு இந்து பாத்ரூம் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் ஒரு திருட்டு பெண்மணி, அறைக்குள் புகுந்து குழந்தையை கடத்திச் சென்றதாக தெரிகிறது. குழந்தையை காணவில்லை என பதறி துடித்த இந்து மற்றும் அவரது உறவினர்கள், டாக்டர்களிடம் முறையிட்டனர். மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை போட்டு பார்த்தபோது, மஞ்சள் சேலை அணிந்திருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு பெண்மணி கையில் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அலட்சியமாக நடந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை முதல்வர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.