கணவனின் கள்ளத்தொடர்பால் புதுமணப் பெண் தற்கொலை
தூத்துக்குடி: தாலி கட்டிய கணவன் மற்றொரு பெண்ணை நாடிச் சென்றதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள நெய்விளையை சேர்ந்தவர் உத்தமசிங் . இவருடைய மகள் உமா கோரஸ்ராணி .
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பீட்டர் சகரியா என்பவருக்கும் கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடந்தது.

தூக்கு போட்டு தற்கொலை:
பீட்டர் சகரியா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை உமா கோரஸ்ராணி வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை:
இதுகுறித்து தகவல் அறிந்த நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உமா கோரஸ்ராணியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

15 நாளில் மரணம்:
திருமணமான 15 நாளில் புதுப்பெண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் தமிழ்ராஜனும் விசாரணை நடத்தி வருகிறார்.

கணவனின் கள்ளத்தொடர்பு:
இதற்கிடையே கள்ளத் தொடர்பு விவகாரத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பீட்டர் சகரியா கடந்த சில நாட்களாக ஒரு பெண்ணிடம் செல்போனில் இரவு நேரத்தில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை உமா கோரஸ்ராணி கண்டித்தாராம். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கூடுதல் வரதட்சணை:
மேலும் பீட்டர் சகரியா தனது மனைவியிடம் 15 பவுன் கூடுதல் வரதட்சணை வாங்கி வரவேண்டும் என சித்ரவதை செய்தும் வந்தாராம். சம்பவத்தன்று இரவு மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தோழியிடம் புலம்பல்:
தான் விரும்பிய வாழ்க்கை தனக்கு அமையவில்லையே என வாழ்க்கையில் வெறுப்படைந்த உமா கோரஸ்ராணி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்தினம் இரவு விடிய விடிய தனது சக தோழிகளிடம் செல்போனில் பேசி தனக்கு நேர்ந்த வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

ஆறுதலுக்கும் பயனில்லை:
அப்போது அவரது தோழிகள் உமா கோரஸ்ராணிக்கு ஆறுதல் கூறியுள்ளனர். எனினும் சமாதானம் அடையாத உமா கோரஸ்ராணி நேற்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பல்வேறு கோணங்கள்:
கணவனின் கள்ளத்தொடர்பு காரணமாக புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications