ஆய்வுக்கே ஷாக் ஆனா எப்படி?... அடுத்து தலைமைச்செயலகத்தில் தினமும் அட்டெண்டன்ஸ் போடப் போறாராம் ஆளுநர்!
தமிழக ஆளுநர் அடுத்தகட்டமாக தலைமைச் செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு தினமும் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
சென்னை : அதிகாரிகளுடனான ஆய்வைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமைச் செயலகத்திற்கு தினமும் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் செயல்பாடுகளை பார்வையிடுவதாக கோவையில் இருந்து தனது ஆபரேஷன் ஆய்வை தொடங்கியுள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். கடந்த இரண்டு நாட்களாக கோவையில் அதிகாரிகளுடன் அதிரடி ஆலோசனை, அதனைத் தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டப்பணி ஆய்வு என்று படுபிசியாக இருந்தார் ஆளுநர்.
எதிர்க்கட்சிகள் ஆளுநரின் ஆய்வை கடுமையாக விமர்சித்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் திருப்பூரில் மரக்கன்றுகளை நடும் விழாவில் பங்கேற்றார் ஆளுநர் பன்வாரிலால். அரசின் செயல்பாடுகளை பார்த்தால் தான் தமிழகம் எப்படி வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும் என்று ஆளுநர் தனது ஆய்வை நியாயப்படுத்தினார்.
அரசியல் காரணமாக எதிர்ப்பு
அரசின் நலத்திட்டப் பணிகளை தான் ஆளுநர் ஆய்வு செய்தாரே தவிர இதில் மாநில சுயாட்சி எங்கும் விட்டுக்கொடுக்கப்படவில்லை என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே இந்த பிரச்னையை அரசியல் நோக்கத்துடன் எதிர்ப்பதாக தெரிவித்தார்.
பாஜகவின் சதி என குற்றச்சாட்டு
ஆளுநரின் ஆய்வு தவறு என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. மாநில சுயாட்சியை பறிக்கும் செயல் என்றும் பாஜக திட்டமிட்டே ஆட்சியில் குளறுபடி செய்வதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றன.
அடுத்து தலைமைச் செயலகம் தான்
ஆனால் ஆளுநரின் ஆய்வுக்கே ஷாக்கானா எப்படி, அடுத்து ஆளுநர் தலைமைச் செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு தினமும் வந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்டின் முதல் பட்ஜெட் சட்டசபை கூட்டம், ஆளுநர் தலைமையில் நடக்கும், இதில் பங்கேற்பதற்காக வரும் ஆளுநருக்காக தலைமைச் செயலகத்தில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் அறைகள் உள்ளன.
எந்த ஆளுநரும் சென்றதில்லை
வழக்கமாக ஆளுநர்கள் தரைத்தளத்தில் மட்டுமே சிறிது நேரம் இருந்துவிட்டு சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு செல்வர். இதுவரை முதல் தளத்தில் உள்ள ஆளுநர் அறைக்கு யாருமே சென்றதில்லை என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் இனி தினமும் ஆளுநர் தலைமைச் செயலகம் வந்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசும், அமைச்சர்களும் என்ன பதில் சொல்லப்போகிறார்களோ தெரியவில்லையே.