ஹைகோர்ட்டில் நீலகிரி பாஜக வேட்பாளர் வழக்கு! அவசரமாக விசாரிக்க மறுப்பு!!
சென்னை: நீலகிரி லோக்சபா தொகுதியில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீலகிரி தொகுதியில் குருமூர்த்தி என்பவரை பாஜக வேட்பாளராக அறிவித்தது. அவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய வேட்புமனுவும் மாற்று வேட்பாளர் மனுவும் நேற்று அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டன.

இவர்கள் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என்பதற்கான கடிதத்தைக் கொடுக்கவில்லை என்பதால் வேட்புமனுக்கள் தள்ளுபடியானதாக கூறப்பட்டது. ஆனால் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படும் வகையிலேயே குருமூர்த்தி விலைபோய்விட்டார் என்று கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கொந்தளித்து பாஜக அலுவலகத்தை சூறையாடினர். .
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் குருமூர்த்தி இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமது வேட்புமனு தள்ளுபடி செய்தது தவறானது.. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதை அவசர வழக்காக கருத முடியாது.. தேர்தல் வழக்காக மட்டுமே கருத முடியும் என்று கூறியது.
இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications