அக்னிச்சட்டி ஏந்திய பக்தர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் … 9 பேர் படுகாயம்
விருதுநகர்: விருதுநகரில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் அக்னிச்சட்டி எடுத்துவந்த பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் வழக்கறிஞர் உட்பட 9 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் உட்பட 14 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், நேர்த்திக் கடன்களை செலுத்தும் வகையில் ஏராளமானோர் அக்னிசட்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில், விருதுநகர் அய்யனார்நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமலிங்கத்தின் உறவினர் அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, திருக்கோயில் வளாகம் முன்பு கூட்டநெரிசலாக இருந்ததால் மேளதாளத்துடன் ஆடி சென்றார்களாம்.
அப்போது, அந்தக்கும்பலில் வந்த ராமலிங்கத்தை காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி கையை பிடித்து ஓரமாக நிற்கும் படி கூறினாராம். அதற்கு, ராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து டி.எஸ்.பியை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ், பஜார் காவல் நிலைய ஆய்வாளர் ராமநாராயணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் ஆகியோருக்கும், வழக்குரைஞர் தரப்பைச் சேர்ந்தோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் தாக்கியும் உள்ளனர்.
இதில், வழக்குரைஞர் ராமலிங்கம்(27), நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் முத்துச்சாமி(42), சங்கர்(25), சங்கரநாராயணன்(46), ராஜா(32), மணிகண்டன்(18), வெங்கடேஷ்(22), முத்து(21), குமாரவேலு(32) மற்றும் முத்தையா(20) உள்ளிட்டோர் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்கறிஞர் ராமலிங்கம் மேற்கு காவல் நிலையத்தில் டி.எஸ்.பி.சக்கரவர்த்தி, காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் ஆகிய 14 பேர் மீது புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications