சென்னை சீர்திருத்த பள்ளியிலிருந்து 9 சிறுமிகள் தப்பி ஓட்டம்
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 சிறுமிகள் சீர்திருத்த பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தப்பியோடினர்.
சென்னை: சென்னை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்க வைக்கப்பட்ட 9 சிறுமிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை தப்பிச் சென்றனர். இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, கெல்லீஸ் பகுதியில் அரசு கூர்நோக்கு பள்ளி செயல்பட்டு வருகிறது. சிறு வயதில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர், சிறுமிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பள்ளியில், திருவொற்றியூர், வண்ணாரபேட்டை, மணலி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் 9 சிறுமிகளை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அங்கிருந்து 9 சிறுமிகளும் யாருக்கும் தெரியாமல் கதவை திறந்து, காப்பக கேட் வழியாக ஏறி குதித்து தப்பிச் சென்றனர்.சத்தம் கேட்டு சீர்திருத்த பள்ளி காப்பாளர் எழுந்து பார்த்தபோது, சிறுமிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக, இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தப்பியோடிய 9 சிறுமிகளும் அதே பகுதியில் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்த சீர்திருத்த பள்ளி ஊழியர்கள், அவர்களை பிடித்து காப்பகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். கடந்த ஜூன் மாதம் சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதனை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரவோடு இரவாக 34 சிறுவர்கள் சுவர் ஏறி குதித்து வெளியே தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications