வேதாரண்யத்திலும் மடத்தை ஆக்கிரமிக்க முயற்சி- நித்யானந்தா சீடர்கள் மீது ஆத்மானந்தா சீடர்கள் தாக்குதல்
நாகப்பட்டினம்: தஞ்சாவூரைத் தொடர்ந்து வேதாரண்யத்திலும் ஒரு மடத்தை ஆக்கிரமிக்க முயற்சித்த சர்ச்சை சாமியார் நித்யானந்தா சீடர்களை பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கி விரட்டியுள்ளனர்.
அண்மையில் தஞ்சாவூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்குச் சொந்தமான பால்சாமி மடத்தை ரூ.200 கோடிக்கு வாங்கியதாகக் கூறி உரிமை கொண்டாடிய நித்யானந்தாவின் சீடர்களை பொதுமக்கள் அடித்து வெளியேற்றினர்.

இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள சாதுக்களை மடத்தையும் நித்யானந்தா சீடர்கள் ஆக்கிரமிக்க முயற்சித்துள்ளனர். இந்த சாதுக்கள் மடத்தை ஆத்மானந்தா சுவாமி மடத்தின் நிர்வாகி ஞானேஸ்வாரனந்தா பராமரித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் 29-ந் தேதி நித்யானந்தாவின் சீடர்கள் 7 பேர் இந்த மடத்துக்கு வந்து தங்கினர். ஆத்மானந்தா சுவாமி மடத்தின் நிர்வாகத்திடம் ரூ. 2 கோடி கொடுத்து அதற்கு ஈடாக இந்த மடத்தைப் பெற்றுள்ளதாக நித்யானந்தா தரப்பினர் கூறிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மடத்துக்குள் நுழைந்த சிலர் நித்யானந்தாவின் சீடர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அடித்து விரட்டினர்.
இதில் பார்த்திபன் என்பவர் படுகாயமடைந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications