தீவிரமடையும் என்.எல்.சி ஊழியர்கள் போராட்டம்- இன்று மீண்டும் சென்னையில் பேச்சுவார்த்தை!
சென்னை: நெய்வேலியில் என்.எல்.சி. ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் மண்டலத் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் இன்று மீண்டும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, என்.எல்.சி நிரந்தரத் தொழிலாளர்கள் கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து, தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் மண்டலத் தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் ஜூலை 22, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

தொடர்ந்து, டெல்லியில் மத்திய தலைமை தொழிலாளர் ஆணையர் தலைமையில் ஜூலை 30 ஆம் தேதி நடத்தப்பட்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் காரணமாக, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த என்.எல்.சி. தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். நெய்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்து நிரந்தரத் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்து, போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், சென்னையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர்நல ஆணையர் அலுவலகத்தில் மண்டலத் தொழிலாளர் நல ஆணையர் கே.சேகர் தலைமையில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்கம், தொமுச தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இன்று பகல் 12 மணிக்கு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், நெய்வேலியில் மறியல் போராட்டத்தை நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து தொமுச தொழிற்சங்க பொதுச் செயலாளர் ராசவன்னியன், "தொடர் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக நெய்வேலியில் ஹெச்.எம்.எஸ். அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சென்னையில் இன்று நடைபெறும் முத்தரப்புப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால், அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை முதல் சுரங்க நுழைவாயிலில் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பங்கேற்கும் மறியல் போராட்டம் நடத்துவது எனவும், புதன்கிழமை அனல் மின் நிலைய நுழைவாயிலில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும், பின்னர் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications