அயோத்தி கரசேவைக்கு அதிமுக ஆட்களை அனுப்பவில்லை: வலிய வந்து விளக்கம் தரும் இல. கணேசன்!

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஜெயலலிதா, அயோத்தி கரசேவைக்கு அதிமுக ஆட்களை ஒருபோதும் அனுப்பியது இல்லை என்றார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியோ, அதிமுக கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அயோத்தியில் கரசேவைக்கு ஆட்களை அனுப்பிய பாஜகவுடன் ஏன் திமுக கூட்டணி சேர்ந்தது என்றும் ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருந்தார். இந்த சர்ச்சை குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளதாவது:
1991ஆம் ஆண்டு அயோத்தி கரசேவைக்கு ஆட்களை அனுப்பும் மாநில ஒருங்கிணைப்பாளராக நான்தான் இருந்தேன். நாங்கள் அனுப்பி வைத்தோர் பட்டியலில் அதிமுகவினர் எவரும் இடம்பெறவில்லை.
திமுகவினர் பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் ராஜஜென்ம பூமி இயக்கத்தை மட்டுமே அதிமுக ஆதரித்தது.
இவ்வாறு இல. கணேசன் கூறியுள்ளார்.
ஏன் விளக்கம்?
அயோத்தி கரசேவை விவகாரம் தொடர்பான பஞ்சாயத்து கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும்தான்.. ஆனால் ஜெயலலிதாவை காப்பாற்றும் வகையில் இல. கணேசன் வலிய வந்து விளக்கம் கொடுத்திருப்பதைப் பார்த்தால் லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றுதான் இது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications